சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

By செய்திப்பிரிவு

சென்னை: ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பில், திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னையில் நேற்று தொடங்கியது. இதில், பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் போது, ஏழுமலையானுக்கு தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் 2 மங்கலப் பொருட்கள் சமர்ப்பிக்கப்படும். அவை, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை. மற்றொன்று ஏழுமலையான் கருடசேவைக்கான வெண்பட்டு திருக்குடைகள்.

வைகுண்டத்தில் நாராயணனின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷனே, பெருமாள் எழுந்தருளும்போது திருக்குடையாகிறார் என்பது ஐதீகம். இதன் அடிப்படையில் திருமலையில் எழுந்தருளியுள்ள ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவ கருடசேவையின்போது, திருக்குடைகள் சமர்ப்பிக்கப் படுகின்றன.

கடந்த 2005-ம் ஆண்டு முதல் ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பில், திருப்பதி திருக்குடை உபய உற்சவவிழா நடத்தப்படுகிறது. அதன்படி, 19-வது ஆண்டாக திருக்குடை உற்சவ ஊர்வலம் நேற்று தொடங்கியது. சென்னை பூக்கடை சென்னகேசவப் பெருமாள் கோயிலில் 11 வெண் பட்டுக் குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, ஊர்வலத் தொடக்க நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

ஹிந்து தர்மார்த்தஸமிதியின் நிர்வாக அறங்காவலர் வேதாந்தம் தலைமை வகித்தார். அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி வரவேற்றார். ரத்தின கிரி ஸ்ரீபாலமுருகன் கோயில் மவுன குரு தவத்திரு பால முருகனடிமை சுவாமிகள், கலவை கமலக் கண்ணியம்மன் கோயில் தவத்திரு சச்சிதானந்தா சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டு ஆசி வழங்கி திருக்குடை ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தனர்.

சென்னகேசவப் பெருமாள் கோயிலில் தொடங்கிய ஊர்வலம் என்.எஸ்.சி.போஸ் சாலை – கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு வழியாக பைராகி மடத்தை அடைந்தது. பின்னர் மாலை 4 மணிக்கு பைராகி மடத்தில் தொடங்கி வால்டாக்ஸ் சாலை வழியாக மாலை 5.40 மணிக்கு குடைகள் கவுனி தாண்டியது.

வால் டாக்ஸ் சாலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருக்குடைகளை தரிசனம் செய்தனர். பின்னர் செயின்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஸ்டேரன்ஸ் சாலை, ஓட்டேரி, கொன்னுார் நெடுஞ்சாலை வழியாகச் சென்று காசி விஸ்வநாதர் கோயிலில் குடைகள் இரவு வைக்கப்பட்டன.

காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று காலை சிறப்பு பூஜைக்கு பிறகு,மேடவாக்கம் குளச்சாலை பாலசுப்பிரமணி சுவாமி கோயில் உட்பட சென்னையின் பல்வேறு பகுதிகள் வழியாக ஊர்வலம் சென்று வில்லிவாக்கம் சவுமிய தமோதரப் பெருமாள் கோயிலில் குடைகள் இரவு தங்கும். நாளை (செப்.18) சிறப்பு பூஜைக்குப் பிறகு ஊர்வலம் அங்கிருந்து பாடி, அம்பத்தூர் எஸ்டேட், முகப்பேர், அம்பத்துார், திருமுல்லைவாயில் சென்று, வெங்கடேஸ்வரா பள்ளியில் குடைகள் இரவு தங்கும்.

செப்.20-ம் தேதி திருவள்ளூரில் தொடங்கி கனகம்மாள் சத்திரம் வழியாக அன்று இரவு கீழ் திருப்பதி சென்று, அங்கு பத்மாவதி தாயாருக்கு 2 குடைகள் சமர்ப்பணம் செய்யப்படும். அதைத் தொடர்ந்து செப்.21-ம் தேதி காலை திருமலை திருப்பதியை திருக்குடைகள் சென்றடையும். அங்கு 9 குடைகள் சுவாமிக்கு சமர்ப்பணம் செய்யப்படவுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE