மதுரை: மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயில் ஆடிப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது ஆடிப் பெருந் திருவிழா. இத்திருவிழா இன்று காலை (ஜூலை 24) 10 மணி முதல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஜூலை 28-ம் தேதி காலை 7 மணியளவில் கள்ளழகர், சிவகங்கை சமஸ்தானம் மறவர் மண்டபத்துக்கு தங்கப்பல்லக்கில் எழுந்தருள்வார். 31-ம் தேதி இரவு தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.
ஆடி மாத பவுர்ணமியான ஆக.1-ம் தேதி காலை 8 மணியளவில் தேரோட்டம் நடைபெறும். அன்றைய தினம் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில் கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜை, தீபாராதனை, சந்தனம் சாற்றுதல் நடைபெறும்.
ஆக. 3-ம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.