மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா கொடியேற்றம்

By சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா நேற்று காலை அம்மன் சன்னதியிலுள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. அப்போது மீனாட்சி அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இரவில் சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மன் ஆடி வீதியில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து தினமும் காலையில் தங்கச்சப்பரத்திலும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருள்வார்.
2-ம் நாள் அன்ன வாகனம், 3-ம் நாள் தங்க காமதேனு வாகனத்தில் எழுந்தருள்வார். அன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு மூலவர், உற்சவர் அம்மனுக்கு ஏற்றி இறக்குதல் வைபவமும் நடைபெறும்.

அதனைத்தொடர்ந்து 4-ம் நாள் இரவு வெள்ளி சிம்மாசனம், 5-ம் நாள் வெள்ளி ரிஷபவாகனம், 6-ம் நாள் கிளி வாகனம், 7-ம் நாள் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருள்வர். மீனாட்சி அம்மன் புஷ்பப் பல்லக்கில் வலம் வந்தபின் உற்சவர் சந்நிதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடைபெறும். அன்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூஜை நடைபெறும். 8-ம் நாள் இரவு தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார்.

9-ம் நாள் காலை 09.40-க்குமேல் 10.04 மணிக்குள் சட்டத்தேரிலும், இரவில் புஷ்பவிமானத்திலும் எழுந்தருள்வார். 10-ம் நாள் (ஜூலை 29) இரவு 7 அதியற்புத கனகதண்டியல் (சயனத்திருக்கோலம்) அலங்காரத்தில் எழுந்தருள்வார். இத்துடன் திருவிழா நிறைவுபெறும். திருவிழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE