ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா: ஜூலை 22-ல் தேரோட்டம்

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் ஜூலை 22-ம் தேதி நடைபெறுகிறது.

108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு ஆண்டுதோறும் ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்டம் ஜூலை 22-ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து இன்று காலை ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதியில் ஆடிப்பூர கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

விழாவில் இன்று இரவு 16 வண்டி சப்பரத்தில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னாருடன் எழுந்தருளி வீதி உலா வருகிறார். இதில் ஜூலை 17-ம் தேதி ரெங்கமன்னார் கோவர்த்தனகிரி கிருஷ்ணர் அலங்காரத்திலும், ஆண்டாள் சேஷ வாகனத்திலும் எழுந்தருள்கின்றனர்.

18-ம் தேதி பெரியாழ்வார் மங்களாசாசனமும், அன்று இரவு 5 கருட சேவையும், 20-ம் தேதி ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயனிக்கும் சயன சேவையும் நடைபெறுகிறது. 9-ம் நாள் விழாவான ஜூலை 22-ம் தேதி காலை 8:05 மணிக்கு திரு ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்துராஜா, தக்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE