மாங்கனித் திருவிழா | காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

By வீ.தமிழன்பன்

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அம்மையார் திருக்கல்யாண வைபவம் இன்று (ஜூலை 1) சிறப்பாக நடைபெற்றது.

அடியாராக இருந்து இறைவனுக்கு இணையாகப் போற்றப்பட்டவரும், 63 நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவருமான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில், கைலாசநாத சுவாமி நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்துக்குட்பட்ட, காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது.

நிகழாண்டு விழா நேற்று (ஜூன் 30) மாலை ஆற்றங்கரை சித்திவிநாயகர் கோயிலிலிருந்து மாப்பிள்ளை அலங்காரத்தில் பரமதத்த செட்டியாரை ஊர்வலமாக (மாப்பிள்ளை அழைப்பு) அழைத்து வரும் நிகழ்வுடன் தொடங்கியது. இன்று காலை அம்மையார் மணிமண்டபத்தில் அம்மையார் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருக்குளக்கரைக்கு புனிதவதி அம்மையார் எழுந்தருளினார். பின்னர், திருக்கல்யாண மண்டபத்துக்கு பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் வந்தடைந்ததும், திருக்கல்யாண நிகழ்வுகள் தொடங்கின. சிவாச்சாரியார்கள் திருமாங்கல்யத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

திருமாங்கல்யம் சிவாச்சாரியாரால் பக்தர்களிடம் காண்பிக்கப்படுகிறது

தொடர்ந்து திருமாங்கல்யத்தை சிவாச்சாரியார்கள் பக்தர்களிடம் எடுத்துக் காண்பித்து, பக்தர்கள் முன்னிலையில், காலை 11 மணியளவில் அம்மையாருக்கும், பரமதத்தருக்கும் திருக்கல்யாணம் செய்து வைத்தனர். அப்போது மணிமண்டபத்தில் கூடியிருந்த திரளான பக்தர்கள் அம்மையாரை வழிபட்டனர். பின்னர் சுவாமிகளுக்கு மகா தீபாராதனைக் காட்டப்பட்டு,16 வகையான சோடச உபசாரங்கள் செய்யப்பட்டது.

கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் திரளான அளவில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டு இறைவனை தரிசித்தனர். கோயிலுக்கு வெளியில் உள்ள பக்தர்கள் திருக்கல்யாணத்தை கண்டு தரிசிக்கும் வகையில் டிஜிட்டல் திரைகள் மூலம் திருக்கல்யாண நிகழ்வுகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. நிறைவாக பக்தர்களுக்கு மாங்கனி உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய தாம்பூலப் பைகள் வழங்கப்பட்டன.

புனிதவதி அம்மையாருக்கும்- பரமதத்தருக்கும் திருக்கல்யாணம் செய்து வைக்கப்படுகிறது

சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.எம்.எச்.நாஜிம், பி.ஆர்.என்.திருமுருகன், மாவட்ட ஆட்சியர் அ.குலோத்துங்கன், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணிஷ், நிர்வாக அதிகாரி (கோயில்கள்) கு.அருணகிரிநாதன், தேவஸ்தான அறங்காவல் வரியத் தலைவர் ஆர்.வெற்றிச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இன்று இரவு பிச்சாண்டவர் வெள்ளை சாற்றி புறப்பாடும், புனிதவதியாரும், பரமதத்த செட்டியாரும் முத்து சிவிகையில் திருவீதி உலா வருதலும் நடைபெறுகிறது. நாளை (ஜூலை 2) அதிகாலை 3 முதல் காலை 6 மணி வரை பிச்சாண்டவர், பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் தீபாராதனை, 6.45 மணிக்கு பரமதத்தர் காசுக்கடை மண்டபத்துக்கு (கடைத்தெரு பொய்யாதமூர்த்தி விநாயகர் கோயில்) வருதல், விழாவின் சிறப்புமிக்க நிகழ்வான பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து இறைவனை வழிபடும் பிச்சாண்டவர் வீதியுலா புறப்பாடு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெறுகிறது.

திருக்கல்யாணத்தை கண்டு தரிசிக்கும் பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

மாலை 6 மணிக்கு அம்மையார் எதிர்கொண்டு அழைத்து மாங்கனியுடன் அமுது படைக்கும் நிகழ்சி அம்மையார் கோயிலில் நடைபெறும். நாளை மறுநாள் (ஜூலை 3) அதிகாலை 5 மணிக்கு இறைவன் அம்மையாருக்கு காட்சிக் கொடுக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. ஆக.1- ம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE