விநாயகர்   சதுர்த்தி படையல்: கடலைப் பருப்பு மோதகம்

By செய்திப்பிரிவு

தொகுப்பு : ப்ரதிமா

அம்மாவின் கட்டளையைக் காப்பதற்காக அப்பாவுக்கே அனுமதி மறுத்ததாகச் சொல்லப்படும் விநாயகரைப் பலருக்கும் பிடிப்பதைப் போலவே அவருக்குப் பிடித்தமானவை எனச் சொல்லப்படும் மோதகமும் அதிரசமும்கூடக் குழந்தைகளுக்குப் பிடிக்கும். முதற் கடவுளுக்கு முதல் வணக்கம் வைக்கும்போது அவருக்குப் பிடித்தவற்றைப் படையலிடுவது சிறப்பு என்கிறார் சென்னை போரூரைச் சேர்ந்த ராஜகுமாரி. படையலின் பழமை மாறாமல் அதேநேரம் அவற்றில் சில புதுமையையும் புகுத்தலாம் எனச் சொல்லும் அவர், சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார்.

கடலைப் பருப்பு மோதகம்

என்னென்ன தேவை?

கடலைப் பருப்பு – 1 கப்
துருவிய வெல்லம் – ஒன்றரை கப்
ஏலப்பொடி – 1 டீஸ்பூன்
கொழுக்கட்டை மாவு – 1 கப்
உப்பு – சிறிதளவு
நல்லெண்ணெய், தேங்காய்த் துருவல் – தலா 1 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

கடலைப் பருப்பைக் குழையாமல் வேகவைத்துக்கொள்ளுங்கள். வெல்லம் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வையுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடுங்கள். அதில் தேங்காய்த் துருவல், ஏலப்பொடி இரண்டையும் சேர்த்துக் கிளறுங்கள். வேகவைத்த கடலைப் பருப்பையும் சேர்த்துக் கிளறி இறக்கிவையுங்கள். ஆறியதும் மிக்ஸியில் போட்டுச் சுற்றியெடுங்கள். கைகளால் உருட்டும் பதம் இருக்க வேண்டும். கலவை சற்றுத் தளர்வாக ஆகிவிட்டால் வாணலியில் போட்டு ஒரு டீஸ்பூன் நெய் விட்டுக் கெட்டியாகும்வரை கிளறி இறக்குங்கள்.

வாணலியில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு, நல்லெண்ணெய் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். அதில் மாவைக் கொட்டி, கட்டிதட்டாமல் கிளறுங்கள். மாவு வெந்ததும் இறக்கிவைத்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டுங்கள். அவற்றைச் சொப்பு போலச் செய்து உள்ளே பூரணத்தை வைத்து மூடி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE