தலைவாழை: பராத்தா

தொகுப்பு:ப்ரதிமா

மழைக்காலத்தில் அவ்வளவாகத் தாகம் எடுக்காது. இதனால், பலரும் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீரைக் குடிக்க மாட்டோம். அதனால் வழக்கமான உடலியல் செயல்பாடுகள் பாதிப்படைவதைக்கூட நாம் உணர்வதில்லை. உடலின் நீர்த் தேவையைச் சமாளிக்க நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைச் சாப்பிடலாம் என்கிறார் சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த லட்சுமி சீனிவாசன். நீர்ச்சத்து அதிகமுள்ள முள்ளங்கியில் பராத்தா, பிரியாணி, வத்தக் குழம்பு உள்ளிட்ட சுவையான உணவு வகைகளைச் செய்யவும் அவர் கற்றுத்தருகிறார்.

பராத்தா

என்னென்ன தேவை?

துருவிய முள்ளங்கி – 1 கப்
வெங்காயம் – 1 (துருவியது)
நறுக்கிய பச்சை மிளகாய் – 1
நறுக்கிய கொத்தமல்லி – கால் கட்டு
உப்பு – சிட்டிகை
பெருங்காயத் தூள் – சிறிதளவு
கோதுமை – 1 கப்
நெய் – 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி, ஓமம் – ஒரு சிட்டிகை
நெய் – தேவைக்கு

எப்படிச் செய்வது?

முள்ளங்கி, வெங்காயம், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். பத்து நிமிடம் கழித்து பிழிந்து சாற்றைப் பிழிந்தெடுங்கள். அதை மாவு பிசைய பயன்படுத்திக் கொள்ளலாம். முள்ளங்கி, வெங்காயக் கலவையுடன் நறுக்கிய மல்லித் தழை, பச்சை மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்து கொள்ளுங்கள்.

மஞ்சள் தூள், கோதுமை மாவு, உப்பு, ஓமம் ஆகியவற்றில் பிழிந்தெடுத்த சாற்றை ஊற்றிச் சப்பாத்திக்கு ஏற்ற பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசையலாம். மாவை 15 நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு பராத்தாவாகத் திரட்டி, உள்ளே முள்ளங்கி கலவையை வைத்து மூடி, போளிபோல் கனமாகத் திரட்டுங்கள். அதைச் சூடான தவாவில் நெய் தடவிப் போட்டு இருபுறமும் நன்றாக வேகவிட்டு எடுங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE