முழுமையாக மீண்ட சுஷ்மிதா - ‘ஆர்யா’ புதிய சீசனுக்காக கடும் பயிற்சி

By செய்திப்பிரிவு

உடல்நலப் பிரச்சினையில் இருந்து முழுமையாக மீண்ட நடிகை சுஷ்மிதா சென், ‘ஆர்யா’ வெப் தொடரின் புதிய சீசனுக்காக தீவிர களரி பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாகவும், ரத்தக்குழாயில் 95% அடைப்பு இருந்ததால் தனக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில், தற்போது மாரடைப்பிலிருந்து முழுமையாக மீண்ட அவர் ஹாட்ஸ்டாரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘ஆர்யா’ வெப் தொடரின் புதிய சீசனுக்காக தீவிர களரி பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் களரிப் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், தனது பயிற்சியாளருக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், களரி மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ராம் மாத்வானி இயக்கத்தில் 2020-ஆம் ஆண்டு வெளியான ’ஆர்யா’ முதல் சீசன் பெரும் வரவேற்பை பெற்றது. இத்தொடர் ’பெனோஸா’ என்ற டச்சு தொடரை தழுவி எடுக்கப்பட்டது. இது சர்வதேச எம்மி விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. இதன் 2வது சீசன் 2021ஆம் வெளியானது. இந்த நிலையில் இத்தொடரின் சீசன் 3 தற்போது ஜெய்ப்பூர் உள்ளிட்ட பகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE