“நான் இதுவரை பயணிக்காத புதிய ஜானர்” - புதிய வெப் சீரிஸ் குறித்து நடிகை ரேவதி

By செய்திப்பிரிவு

நடிகை ரேவதி ‘டூத் பரி: வென் லவ் பைட்ஸ்’ என்ற புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கிறார். ஏப்ரல் 20-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் இந்த வெப் தொடர் வெளியாகிறது.

தமிழில் 1983-ம் ஆண்டு வெளியான ‘மண்வாசனை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகர் ரேவதி. மணிரத்னத்தின் ‘மௌனராகம்’ படம் மூலம் தனிகவனம் பெற்றார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள படங்களில் நடித்துள்ள ரேவதி, தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல்ஹாசன், மோகன்லால் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் 1991-ஆம் ஆண்டு வெளியான ‘லவ்’ இந்தி படத்திலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு, அவர் இயக்கிய ‘சலாம் வெங்கி’ திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரேவதி தற்போது வித்தியாசமான கதாபாத்திரத்தில் ‘டூத் பரி: லவ் பைட்ஸ்’ என்ற வெப் சீரிஸில் நடிக்கிறார். ரொமான்டிக் ஃபான்டஸி த்ரில்லராக உருவாகும் இத்தொடர் ஏப்ரல் 20-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்தத் தொடர் குறித்து ரேவதி கூறுகையில், “நான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படம் குறித்தும் நிறைய யோசிப்பேன். ‘டூத் பரி: வென் லவ் பைட்ஸ்’ சீரிஸும் இதற்கு விதிவிலக்கல்ல. நான் ஸ்கிரிப்டைக் கேட்டபோது, ​​​​ இதுவரை நான் பயணிக்காத புதிய ஜானர் இது என்பதை அறிந்துகொண்டேன்.

இது வழக்கமான கதையல்ல; கொல்கத்தாவில் நடக்கும் வித்தியாசமான கற்பனைக் கதை. இதனை ப்ரதீம் தாஸ்குப்தா இயக்கியிருக்கிறார். அசாதாரண வடிவங்களில் புதிய விஷயங்களை அணுகுவது சவாலானது. இந்த சீரிஸில் நம்பிக்கைகளில் உறுதியாக நின்று, மற்ற எல்லா முரண்களையும் எதிர்த்து போராடும் ஒருவரின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு எப்போதும் விருப்பமானது ஆகும்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE