அன்று ராணிகளாக பாலியல் தொழிலாளர்கள்... - கவனம் ஈர்க்கும் பன்சாலியின் ‘ஹீராமண்டி’ சீரிஸ்

By செய்திப்பிரிவு

“ராணிகளாக இருந்த பாலியல் தொழிலாளர்களின் உலகத்திற்கு உங்களை வரவேற்கிறோம்” என்ற வாசகத்துடன் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘ஹீராமண்டி’ வெப் சீரிஸின் முதல் பார்வை கவனம் ஈர்த்துள்ளது.

பாலிவுட் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் சஞ்சய் லீலா பன்சாலி. கடந்த 2022-ம் ஆண்டு ஆலியா பட் நடிப்பில் உருவான ‘கங்குபாய் காதிவாடி’ படத்தை இயக்கினார். இந்தப்படத்தைத் தொடர்ந்து அவர் வெப் சீரிஸ் ஒன்றை இயக்குகிறார். ‘ஹீராமண்டி’ (Heeramandi) என பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடர் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

மனிஷா கொய்ராலா, சோனாக்‌ஷி சின்ஹா, அதிதி ராவ் ஹைதாரி, ரிச்சா சதா, ஷர்மின் சேகல் மற்றும் சஞ்சீதா ஷேக் உள்ளிட்ட பெரும் நடிகர் பட்டாளமே இதில் நடிக்கிறது. சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் நடக்கும் கதையாக ‘ஹீராமண்டி’ உருவாகிறது. இந்நிலையில், தற்போது இதன் முதல் பார்வை வீடியோ வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

முதல் பார்வை வீடியோ: ‘பாலியல் தொழிலாளிகள் ராணிகளாக இருந்த உலகத்திற்கு உங்களை வரவேற்கிறோம்’ என்ற வாசகத்துடன் மஞ்சள் நிற ஆடைகள் அணிந்த நடிகைகள் காட்டப்படுகிறார்கள். ராணிகளைப் போன்ற உடையலங்காரத்தில் இருக்கும் அவர்களின் விஷுவல்ஸ் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. விரைவில் தொடர் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் அதிகம் அறியப்படாத பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தத் தொடர் உருவாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE