ஜெயமோகனின் ‘கைதிகள்’ சிறுகதையைத் தழுவி உருவாக்கப்பட்ட படம் ‘ரத்தசாட்சி’. ரபீக் இஸ்மாயில் இயக்கிய இப்படம் ஆஹா தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. இதில் நக்சலைட் கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருந்தார் கண்ணா ரவி.
அவர் கூறியதாவது: நான் பாலுமகேந்திரா பள்ளியில் படித்தவன். சுமார் 100 குறும்படங்களில் நடித்திருக்கிறேன். என் மீது எனக்கு நம்பிக்கை வந்த பிறகே, சினிமாவில் நடிக்கத் தொடங்கினேன். ‘குருதியாட்டம்’, ‘மண்டேலா’, ‘கைதி’ உட்பட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறேன்.
நான் முதன்மை பாத்திரத்தில் நடித்த முதல் படம் ‘ரத்தசாட்சி’. இது, என்னை இப்போது அடையாளம் காட்டியிருக்கிறது. இதற்குப் பிறகு எனக்கு சிறந்த வாய்ப்புகள் வருகின்றன. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை. நான் வியந்த இயக்குநர்களின் படங்களிலும் பணியாற்ற விரும்புகிறேன். இப்போது நந்தினி இயக்கும் வெப் தொடர் உட்பட சில படங்களில் நடித்து வருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.