புலனாய்வுக் கதைக்களம்: வெப் சீரிஸில் கால் பதிக்கும் விமல்

By செய்திப்பிரிவு

ஜீ5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ள ‘விலங்கு’ தொடரின் மூலம் வெப் சீரிஸில் கால் பதிக்கிறார் நடிகர் விமல்.

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய வெப் சீரிஸ் ஒன்றில் விமல் நாயகனாக நடித்துள்ளார். ‘விலங்கு’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த சீரிஸ் வரும் பிப்ரவரி 18-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ், ஒரு புலனாய்வு தொடராக உருவாகியுள்ளது. இத்தொடரில் பரிதி என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக விமல் நடித்துள்ளார். இனியா, முனீஸ்காந்த், பாலசரவணன், ஆர்.என்.ஆர்.மனோகர், ரேஷ்மா உள்ளிட்ட பலரும் இத்தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதன் கதை திருச்சியில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. காவலர்களின் வாழ்க்கையை சொல்வதோடு, அவர்களின் உணர்வுபூர்வமான பக்கத்தையும் சொல்வதாக இத்தொடரின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மர்மமான வழக்கை, விமல் விசாரிக்க முற்படும்போது அதில் ஏற்படும் திருப்பங்களே இந்தத் தொடரின் கதைக்களம்.

எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் சார்பில் மதன் தயாரித்துள்ள இத்தொடருக்கு அஜீஷ் இசையமைக்க, தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE