திருமண வாழ்வில் எது முக்கியம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்: மாதவன் 

By செய்திப்பிரிவு

திருமண வாழ்வில் எது முக்கியம் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம் என்று நடிகர் மாதவன் கூறியுள்ளார்.

ஹர்திக் மேத்தா இயக்கத்தில் மாதவன், சர்வீன் சாவ்லா நடிப்பில் உருவாகியுள்ள தொடர் ‘டீகப்புள்டு’. திருமணத்துக்குப் பிறகான உறவுச் சிக்கல்கள் குறித்துப் பேசும் இத்தொடர் இன்று (17.12.21) நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சமூபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு மாதவன், சர்வீன் சாவ்லா இருவரும் இத்தொடர் குறித்துப் பேட்டியளித்துள்ளனர். அதில் பல்வேறு விஷயங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

அந்தப் பேட்டியில் மாதவன் பேசியதாவது:

''மக்கள் மிக எளிதாகப் பின்வாங்கிவிடுகிறார்கள் என நினைக்கிறேன். யாரும் முன்னுரிமைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. கார்ப்பரேட்கள் மற்றும் ட்ரெண்ட் ஆகியவற்றால் ஏராளமான திசை திருப்புதலும், அழுத்தங்களும் இருக்கின்றன. அவை நம்மை போதாமையுடன் இருப்பதாக உணரவைக்கின்றன. இது தேவையற்ற அழுத்தம்.

திருமண வாழ்வில் எது முக்கியம் என்பதை நாம் தெரிந்துகொள்வது அவசியம். இறுதியாக அனைத்தும் ஒரு இணையருடன் கூடிய எளிய வாழ்க்கைக்குதான் வந்து சேரும். நாம் நம் பெற்றோர்களின் உறவைப் பார்த்தாலே அது அவ்வளவு சிக்கலான ஒன்று அல்ல என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்''.

இவ்வாறு மாதவன் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE