அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’ செப்.27-ல் ஓடிடியில் ரிலீஸ்!

By செய்திப்பிரிவு

சென்னை: அருள்நிதி நடித்துள்ள ‘டிமான்டி காலனி 2’ திரைப்படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. 9 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். அருள்நிதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அர்ச்சனா, அருண் பாண்டியன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இப்படம் பரவலான கவனத்தை பெற்றது. ரூ.20 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை நெருங்கி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE