சூரியின் ‘கொட்டுக்காளி’ செப்.27-ல் ஓடிடியில் ரிலீஸ்!

By செய்திப்பிரிவு

சென்னை: சூரி நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கூழாங்கல்’ படத்தின் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘கொட்டுக்காளி’. இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தார். ஆணாதிக்கம், மூட நம்பிக்கையை கேள்வி எழுப்பிய இப்படம் உலக சினிமா தரத்துக்கு இருப்பதாக பாராட்டப்பட்டது. படத்தின் க்ளைமாக்ஸ் குறித்து ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் வெளியாகின.

இருப்பினும் தமிழ் சினிமாவில் முக்கியமான முயற்சி என பலராலும் கவனிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி சிம்ப்ளி சவுத் (Simply South) ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் அமேசான் ப்ரைம் ஓடிடியிலும் வெளியாகும் என கூறப்படுகிறது. சூரி நடிப்பில் அடுத்ததாக ‘விடுதலை பாகம் 2’ திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE