“இது மிகவும் மோசம்!” - ‘ஐசி 814: தி கந்தஹார் ஹைஜாக்’ வெப் சீரிஸ் சர்ச்சையில் கங்கனா கொந்தளிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர்24-ம் தேதி ஐசி 814 என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்154 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து புறப்பட்ட 40 நிமிடங்களில் 5 தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது. பின்னர். மசூத் அசார், உமர் ஷேக் மற்றும் முஷ்டாக்அகமது சர்கார் ஆகிய மூன்று தீவிரவாதிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விமானம் விடுவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை மையமாக வைத்து கந்தஹார் விமானக் கடத்தல் ஐசி-814 என்ற புதிய வெப்தொடர் ஆகஸ்ட் 29-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், ‘ஐசி 814- கந்தஹார் விமான கடத்தல்’ வெப் தொடர் இயக்குநர் அனுபவ் சின்ஹா மீது பாஜக ஐடி விங் தலைவர் அமித் மாளவியா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ஐசி-814’ வெப் தொடரில் பல அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் செயலை நியாயப்படுத்தும் நடவடிக்கையில் இடதுசாரிகள் இறங்கியுள்ளனர்.

உண்மை சம்பவம் நடந்து பல தசாப்தங்களுக்குப் பிறகு வெளியாகியுள்ள ஐசி 814-கந்தஹார் விமான கடத்தல் தொடரை இப்போது பார்ப்பவர்கள் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டதற்கு இந்துக்கள்தான் காரணம் எனநம்பக்கூடும். ஆனால், விமானத்தைகடத்தியவர்கள் அனைவரும் முஸ்லிம்கள். இதுபோன்ற உண்மைகளை திரித்து கூறுவது திரைத்துறையில் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது’’ என்றார். அமித் மாளவியாவின் இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறைஅமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.

உமர் அப்துல்லா கருத்து: ‘காஷ்மீர் பைல்ஸ்’ போன்ற திரைப்படங்களை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொண்டவர்கள் இப்போது ஐசி-814 வெப்தொடருக்கு துல்லியமான சித்தரிப்பையும், முழுமையான உண்மைகளையும் கோருவது வேடிக்கையாக உள்ளது என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

கங்கனா ரனாவத் அதிருப்தி: இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதி பாஜக எம்பி கங்கனா ரனாவத் கந்தஹார் வெப் தொடருக்கு அதிருப்தி தெவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “வெப் தொடர் படைப்பாளிகள் தங்களது அரசியல் சுயலாபத்துக்காக வரலாற்றை திரித்து கையாள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது மிகவும் மோசமான, நியாமற்ற நடவடிக்கை.

ஓடிடி தளங்களில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வன்முறை, நிர்வாண காட்சிகளை எந்த தணிக்கையும் இல்லாமல் காட்டலாம்; அரசியல் ரீதியான தூண்டப்பட்ட தீய நோக்கங்களுக்கு ஏற்ப நிஜ வாழ்க்கை நிகழ்வுகளை சிதைக்கலாம். அதற்கு கம்யூனிஸ்டுகள் அல்லது இடதுசாரிகளுக்கு எல்லா சுதந்திரமும் உள்ளது. ஆனால், பாரதத்தின் ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையை மையமாகக் கொண்ட திரைப்படங்களை உருவாக்க ஒரு தேசியவாதியாக நம்மை ஓடிடி தளங்கள் அனுமதிப்பதில்லை. இதிலிருந்து, தணிக்கை என்பது நம்மில் சிலருக்கு மட்டுமே என்பது தெளிவாகிறது" என்றார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கும் படம், முதலில் செப்டம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. இருப்பினும், தற்போது சிபிஎப்சி (Central Board Of Film Certification) ஒப்புதலுக்காக படம் காத்திருக்கிறது. திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய பல காட்சிகள் வெட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE