“டிவி நிகழ்ச்சிகளில் ஜெயித்தால் மட்டுமே சினிமா வாய்ப்பு வந்துவிடாது” - நடிகர் ஆரவ்

By செய்திப்பிரிவு

சென்னை: பிரபலமான டிவி நிகழ்ச்சிகளில் ஜெயித்தால் மட்டுமே சினிமா வாய்ப்புகள் தேடி வந்துவிடாது என்று நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ முதல் சீசனில் கலந்து கொண்டு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவர் ஆரவ். சரண் இயக்கத்தில் வெளியான ‘மார்க்கெட் ராஜா MBBS' என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன்பிறகு உதயநிதி நடித்த ‘கலகக் தலைவன்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இது தவிர இவர் நடித்த ‘ராஜபீமா’ என்ற படம் நீண்டநாட்களாக கிடப்பில் உள்ளது.

தற்போது ஆரவ் நடித்த ’மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ என்ற திரைப்படம் வரும் மே 19ஆம் தேதி நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ஆர்வ் பேசுகையில், ‘சின்னத் திரையில் ஜெயிப்பது என்பது வேறு, சினிமாத் துறையில் நிரூபிப்பது என்பது வேறு. சினிமாத் துறை என்பது வியாபாரம் சம்பந்தப்பட்டது. ஒரு நடிகரின் வியாபாரத்தை வைத்துதான் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். பிரபலமான டிவி நிகழ்ச்சிகளில் ஜெயித்தால் மட்டுமே சினிமா வாய்ப்புகள் தேடி வந்துவிடாது’ என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE