முதல் பார்வை - சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

By சல்மான்

வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த சரஸ்வதி, தேவகி, சிவரஞ்சனி ஆகியோரது வாழ்க்கையின் ஒரு பகுதியே ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’.

சரஸ்வதி

தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சந்திரனின் (கருணாகரன்) மனைவி சரஸ்வதி (காளீஸ்வரி ஸ்ரீனிவாசன்). கைக்குழந்தையுடன் இருக்கும் அவர் செய்யும் சிறு சிறு விஷயங்கெளுக்கெல்லாம் எரிந்து விழுகிறார் கருணாகரன். இரவில் குழந்தை அழுவதால் எரிச்சலடையும் கருணாகரன் மனைவியை அடிக்கிறார். அவரை ஒரே ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசும் சரஸ்வதியின் வாழ்க்கை அன்று முதல் மாறுகிறது.

தேவகி

அரசு அலுவலகத்தில் உயர் பொறுப்பில் இருக்கிறார் தேவகி (பார்வதி). அதே அலுவலகத்திலேயே அவரது கணவர் மணியும் (சுந்தர் ராமு) பணிபுரிகிறார். மகிழ்ச்சியாகவே சென்று கொண்டிருக்கும் அவர்களது வாழ்வில் ஒரு டைரியால் திடீரென ஒரு புயல் வீசுகிறது. அதுவே தேவகியின் வாழ்க்கையில் ஒரு முக்கிய மாற்றத்துக்கு அடித்தளமாகிறது.

சிவரஞ்சனி

சிறு வயது முதலே ஓட்டப்பந்தயத்தில் வீராங்கனையாகத் திகழ்கிறார் சிவரஞ்சனி (லஷ்மி ப்ரியா) . கல்லூரி சார்பாக பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு கோப்பைகளை வெல்பவருக்கு படிப்பை முடிக்கும் முன்னரே ஹரியுடன் (கார்த்திக் கிருஷ்ணா) திருமணம் நடந்து விடுகிறது. குழந்தையை வயிற்றில் சுமந்தபடி கல்லூரிக்கு வருகிறார். கணவன், மாமியார், குழந்தை ஆகியோரது விருப்பத்துக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொண்டு தன் கனவை மனதில் சுமந்தபடியே வாழ்கிறார்.

இந்த மூன்று படங்களுமே வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த பெண்களைப் பற்றிய கதை என்றாலுமே கிட்டத்தட்ட மூவரது வாழ்விலும் ஒரே விஷயங்கள்தான் மாறாமல் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. மிகவும் ஏழ்மையான சூழலில் காலத்தைத் தள்ளும் சரஸ்வதி வாயைத் திறந்தாலே கணவர் எரிந்து விழுகிறார். அடிக்கிறார். பதிலுக்கு அவர் சொல்லும் ஒரு வார்த்தையை கணவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதன்பின் கணவர் எடுக்கும் முடிவால் அவளது வாழ்க்கையே மாறிப் போகிறது. சரஸ்வதியின் நிலை இப்படியென்றால் சமூகத்தின் உயர்நிலையில் இருக்கும் தேவகி மற்றும் சிவரஞ்சனியின் வாழ்க்கையிலும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. பெரிய வீடு, வேலை, வசதி இருந்தாலும் அவர்களது வாழ்க்கையையும் தீர்மானிப்பவர் ஒரு ஆணாகவே இருக்கிறார்.

படத்தின் எந்தவொரு திடீர் திருப்பம், புல்லரிக்கச் செய்யும் வசனம், அதிரவைக்கும் இசை என எதுவுமே கிடையாது. நம் வீட்டில் ஒரு கேமராவை வைத்துப் படமெடுத்தால் என்னவெல்லாம் நடக்குமோ அதையே படமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் வசந்த் சாய். பெண்கள் எந்த உயரத்துக்குச் சென்றாலும் அவர்களது வாழ்க்கை இன்னும் ஆண்களையே சார்ந்திருக்கும்படியான சமூகக் கட்டமைப்பை காட்சிகளின் வழியே நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறார்.

மூன்று படங்களின் நாயகிகளான காளீஸ்வரி சீனிவாசன், பார்வதி, லஷ்மி ப்ரியா மூவருமே தங்கள் பாத்திரங்களின் தன்மை உணர்ந்து அலட்டலில்லாத இயல்பான நடிப்பை வழங்கியுள்ளனர். வழக்கமாக நகைச்சுவை பாத்திரங்களியே பார்த்துப் பழகிய கருணாகரன் ஒரு புதிய பரிணாமத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். சுந்தர் ராமு, கார்த்திக் கிருஷ்ணா, ஜி.மாரிமுத்து என அனைவருமே தங்கள் இயல்பான நடிப்பின் மூலம் கவர்கின்றனர்.

இளையராஜாவின் இசை ஒலிக்க வேண்டிய இடத்தில் ஒலித்து மவுனமாக வேண்டிய இடங்களில் மவுனமாகிறது. ‘சரஸ்வதி’ படத்தில் வரும் பின்னணி இசை மனதைப் பிசையும் ரகம். என்.கே.ஏகாம்பரம், ரவீ ராயின் ஒளிப்பதிவு படத்தின் கதைக்களத்துக்கு ஏற்ப பார்வையாளர்களைத் தயார் செய்வதில் பெரும்பங்கு வகித்துள்ளன.

எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோரது சிறுகதைகளைப் படமாக்கியுள்ள இயக்குநர் அதில் கமர்ஷியல் அம்சங்கள் எதையும் தூவாமல் எந்தவித சமரசமும் இன்றி அந்தந்தக் கதைகளுக்கு நியாயம் செய்துள்ளார். எனினும் கமர்ஷியல் மசாலாக்களுக்குப் பழகிய தமிழ்ப் பார்வையாளர்களைப் படம் கவருமா என்பது சந்தேகமே. பல இடங்களில் ஆமை வேகத்தில் நகரும் காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன. ஒவ்வொரு படமும் முடியும் இடத்தில் பார்க்கும் நமக்கு அது எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாதது மிகப்பெரிய மைனஸ்.

மூன்று படங்களிலுமே முடிவு இதுதான் என்று இயக்குநரே தீர்ப்பை எழுதாமல் அதைப் பார்வையாளர்களிடமே விட்டது சிறப்பு. வழக்கமான பெண்களை மையமாகக் கொண்ட படங்களைப் போல வசனங்களின் மூலம் பாடமெடுக்காமல் காட்சிகளின் வழியே பெண்களின் நிலையைப் படமாக்கிய இயக்குநர் வசந்த்தை மனதாரப் பாராட்டலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE