வெளிநாட்டு ரசிகர்களிடமும் ‘மகாராஜா’வின் தாக்கம் - நெட்ஃப்ளிக்ஸ் பதிவு சொல்வது என்ன?

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கடந்து பாலிவுட் ரசிகர்களால் வரவேற்பு பெற்றது. தற்போது இந்தியாவைத் தாண்டி வெளிநாட்டு ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். நெட்ஃப்ளிக்ஸ் சமீபத்தில் வெளியிட்ட பதிவு அதனை உறுதி செய்துள்ளது.

விஜய் சேதுபதியின் 50=ஆவது படம் ‘மகாராஜா’. நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய இப்படத்தில் அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். கடந்த ஜூன் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று ரூ.100 கோடி வசூலை ஈட்டியது. இதையடுத்து, இப்படம் அண்மையில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. ஓடிடியில் தொடர்ந்து முதலிடம் பிடித்த இந்தப் படம் இந்தி பேசும் மாநில ரசிகர்களிடையே தாக்கம் செலுத்தியது.

தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘மகாராஜா’ படம் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ஸ்பாயிலர் இல்லாமல், ‘மகாராஜா’ படத்தைப் பற்றி சொல்லுங்கள்” என தெரிவித்திருந்தது. அந்தப் பதிவின் கமென்ட்களில் பெரும்பாலும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தான் பதிலளித்துள்ளனர். அவர்கள் படம் குறித்து புகழ்ந்து பேசியுள்ளனர். இதன்மூலம் படம் உலக அளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலும் ‘மகாராஜா’ படத்தைப் பற்றிய பின்னூட்டங்களில் ‘தந்தையின் அன்பு’ என பதிலளிக்கப்பட்டுள்ளது. சிலர் படத்தில் விஜய் சேதுபதி வாங்கிய அறைகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் நல்ல படங்களை உலகெங்கும் உள்ள ரசிகர்கள் வரவேற்க தயாராக இருப்பதும், அதேபோல ஓடிடி தளங்களின் தாக்கம் பரவலாக இருப்பதையும் அறிய முடிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE