ஊழல், முதல்வர் நாற்காலி, இந்தி... - வசந்தபாலனின் ‘தலைமை செயலகம்’ சீரிஸ் ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தலைமை செயலகம்’ வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் வசந்தபாலன் கடைசியாக ‘அநீதி’ படத்தை இயக்கியிருந்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது இணையத் தொடர் ஒன்றை இயக்கியுள்ளார். இந்தத் தொடருக்கு ‘தலைமை செயலகம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதில், கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ராதிகா சரத்குமார் தயாரிக்கும் இத்தொடரை ஜீ5 ஓடிடி நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில், இந்தத் தொடரின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - தமிழக அரசியல் களத்தின் பின்னணியில் நடக்கும் கதையில், சிட்டிங் முதல்வர் 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார். இந்த விசாரணையால் அவரைச் சுற்றியுள்ளவர்கள் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுவதோடு அதற்காகத் தீவிரமாக இயங்க ஆரம்பிக்கிறார்கள்.

“மாநில கட்சிகளை நசுக்க தான் ஊழல் குற்றச்சாட்டு”, “தமிழ்நாட்ல தமிழ், தமிழ்னு சொல்லி அரசியல் பண்ணிட்டு இருக்காங்க. இந்தி கத்துக்கிட்டா தான் என்ன?” உள்ளிட்ட வசனங்கள் கவனம் பெறுகின்றன. விறுவிறுப்பாக கட் செய்யப்பட்டுள்ள காட்சிகளும், நடிகர்களின் தேர்வும் தொடரை கவனப்படுத்தியுள்ளது. 17-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் தொடரை காண முடியும். ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE