பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘பஞ்சாயத்’ சீசன் 3 மே 28-ல் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

மும்பை: அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘பஞ்சாயத்’ வெப் தொடரின் மூன்றாவது சீசன் வரும் மே 28ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தன் குமார் எழுத்தில் தீபக் குமார் மிஸ்ரா இயக்கத்தில் உருவான வெப் தொடர் ‘பஞ்சாயத்’. கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா காலகட்டத்தின்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இத்தொடர் வெளியானது. நகரத்தில் வளர்ந்து, படித்த ஒரு பட்டதாரி இளைஞன் எந்தவித வசதி, வாய்ப்புகளும் இல்லாத உ.பி மாநிலத்தில் உள்ள ஒரு பின் தங்கிய கிராமத்துக்கு வந்து தாசில்தாராக பணிபுரிகிறார். அங்கு அவருக்கு ஏற்படும் சிரமங்களையும், மன மாற்றங்களையும் மிக இயல்பாகவும், நகைச்சுவையாகவும் இத்தொடர் பேசியது.

ஜிதேந்திர குமார், நீனா குப்தா நடித்த இத்தொடர் இந்தியாவிலிருந்து வெளியான மிகச்சிறந்த தொடர்களில் ஒன்றாக மாறியது. ஓடிடி படைப்புகளுக்காக வழங்கப்படும் ஃபிலிம் ஃபேர் விருதுகளில் நாமினேட் செய்யப்பட்ட அனைத்து பிரிவுகளிலும் இத்தொடர் விருதுகளை தட்டிச் சென்றது.

கடந்த 2022ஆம் ஆண்டு இத்தொடரின் இரண்டாம் சீசன் வெளியானது. இதுவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், கடந்த ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்தொடரின் மூன்றாவது சீசன் வரும் மே 28ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE