சென்னை: பிருத்விராஜ் நடித்துள்ள ‘ஆடுஜீவிதம்’ படத்தின் நீளம் கருதி திரையரங்குகளில் 30 நிமிட காட்சிகள் வெட்டப்பட்டபட்டன. அந்தக் காட்சிகளையும் சேர்த்து ஓடிடி வெளியீட்டின்போது காண முடியும் என இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக படத்தின் இயக்குநர் ப்ளஸ்ஸி கூறுகையில், “இப்படத்தின் படத்தொகுப்பு முடிந்து பார்க்கும்போது, அதன் நீளம் 3 மணி நேரம் 30 நிமிடங்களாக இருந்தது. பின்னர் இவ்வளவு நேரம் வேண்டாம் என முடிவெடுத்து, 30 நிமிட காட்சிகளை நீக்கிவிட்டோம். ஆனால், படம் ஓடிடியில் வெளியாகும்போது பார்வையாளர்கள் அந்த 30 நிமிட காட்சிகளை காணும் வகையில், அவையும் சேர்த்து ஓடிடியில் வெளியிடப்படும்” என்றார். இப்படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இப்படம் வரும் மே மாதம் ஓடிடியில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. முன்னதாக இதேபோல, ‘விடுதலை பாகம் 1’ மற்றும் ‘அனிமல்’ படங்களின் அன்கட் வெர்ஷனும் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆடுஜீவிதம்: மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. படத்தை ப்ளஸ்ஸி இயக்க, பிருத்விராஜ், அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சுனில் ஒளிப்பதிவு செய்துள்ளார். பான் இந்தியா முறையில் கடந்த மார்ச் 28-ம் தேதி வெளியான இப்படம் ரூ.75 கோடியை வசூலித்துள்ளது.