மோகன்லாலின் ‘மலைக்கோட்டை வாலிபன்’ பிப்.23-ல் ஓடிடியில் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: மோகன்லால் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘மலைக்கோட்டை வாலிபன்’ மலையாளப் படம் வரும் பிப்ரவரி 23-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.

மலையாளத்தில் ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’,‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவர் மோகன்லாலை வைத்து இயக்கியுள்ள படம் ‘மலைக்கோட்டை வாலிபன்’. மணிகண்டன் ஆர். ஆச்சாரி, சோனாலி குல்கர்னி மற்றும் ஹரீஷ் பேரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் கடந்த ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதன் மேக்கிங், ஒளிப்பதிவு, தொழில்நுட்ப அம்சங்கள் ரசிகர்களை கவர்ந்தன. ஆனால், பலவீனமான திரைக்கதையால் படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. ரூ.65 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.35 வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படம் வரும் 23-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் வரவேற்பை பொறுத்து இப்படத்தின் முந்தைய மற்றும் பிந்தைய பாகங்களை இயக்க உள்ளதாக இயக்குநர் லிஜோ ஜோஸ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE