சென்னை: தனுஷ் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 9-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஜனவரி 12-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘கேப்டன் மில்லர்’. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், அதிதி பாலன், ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், வினோத் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
பீரியட் ட்ராமாவாக உருவான இப்படம் ஆலய நுழைவுப் போராட்டம், பிரிட்டிஷ் ஆதிக்கம், சாதிய ஒடுக்குமுறைகளை பேசியது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.80 கோடி வசூலை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படம் வரும் பிப்ரவரி 9-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை இந்தி தவிர்த்த தென்னிந்திய மொழிகளில் காண முடியும்.