சென்னை: சுசீந்திரன் இயக்கிய ‘ஈஸ்வரன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிதி அகர்வால். இதில் சிம்பு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்து ஜெயம் ரவியுடன் ‘பூமி’, மகிழ் திருமேனி இயக்கிய ‘கலகத்தலைவன்’ ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கு மற்றும் இந்திப்படங்களில் நடித்து வரும் இவர், இப்போது ஒடிடி-யில் அறிமுகமாகிறார். ஓடிடி ஒன்றுக்காக உருவாகும் ஐக்கிடோ (Aikido) என்ற இந்திப் படத்தில் நிதி அகர்வால் நடிக்கிறார். பழிவாங்கும் கதையை கொண்ட இந்தப் படத்தை அபிஷேக் ஜெய்ஸ்வால் இயக்குகிறார். இதை பெரேர்னா அரோரா தயாரிக்கிறார். இதில் ஜிம்மி ஷெர்கில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் நிதி அகர்வால் இந்திக்கு மீண்டும் செல்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “இதுபோன்ற நல்ல கதையை மறுக்க முடியவில்லை. கேட்டதும் உடனடியாக ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்துக்காக கால்ஷீட்களை அட்ஜஸ்ட் பண்ண வேண்டும். இப்போது பவன் கல்யாண், பிரபாஸ் படங்களில் நடித்து வருகிறேன். தமிழ், தெலுங்கில் உருவாகும் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்