தமிழ் டப்பிங்கில் வெளியானது ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ - ரசிகர்கள் வரவேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்த ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடர் தற்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

1991-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் என்பவர் எழுதிய ‘A Song of Ice and Fire’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட தொடர் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. இத்தொடரின் முதல் எபிசோட், கடந்த 2011-ம் ஆண்டு வெளியானது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர், 2019ஆம் ஆண்டு 8வது சீசனோடு நிறைவடைந்தது.

பரபரப்பும், எதிர்பாராத திருப்பங்களுடனும் எழுதப்பட்ட திரைக்கதையால், இத்தொடர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தது. வெஸ்டரோஸ் எனப்படும் நிலப்பரப்பில் இருக்கும் 7 ராஜ்யங்களுக்கு இடையே நடக்கும் போர்தான் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் மையக்கரு.

இத்தொடர் இந்தியாவில் ஆங்கிலம் மட்டும் இந்தியில் மட்டும் வெளியாகியிருந்தது. கரோனா காலகட்டத்துக்குப் பிறகு ஓடிடி தொடர்களுக்கான வரவேற்பு அதிகரிக்கவே, பலரும் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரை பார்த்து ரசிகர் ஆனார்கள். தமிழிலும் இத்தொடரை டப்பிங் செய்து வெளியிட வேண்டும் என்றும் பலரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்தச் சூழலில் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதற்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE