மும்பை: போபால் விஷவாயு கசிவு குறிந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள புதிய வெப்சீரிஸில் மாதவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தத் தொடர் நவம்பர் மாதம் வெளியாகிறது.
கடந்த 1984-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் (UCIL) ஆலையிலிருந்து அதிக நச்சுத்தன்மை வாய்ந்த மெத்தில் ஐசோசயனேட் (MIc) என்ற விஷ வாயு வெளியேறியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அத்துடன் பலரும் உடல் ரீதியான பாதிப்பால் அவதிப்பட்டனர். இது உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை பேரிழவாக கருதப்படுகிறது.
இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தியில் புதிய வெப்சீரிஸ் ஒன்று உருவாகியுள்ளது. இதில் ஆர் மாதவன், கே.கே.மேனன், பாபில் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை அறிமுக இயக்குநர் ஷிவ் ராவைல் இயக்கியுள்ளார். இந்த இணையதொடரானது போபால் சம்பவத்தின்போது அறியப்படாத ஹீரோக்களின் கதையை பேசுகிறது. குறிப்பாக, அப்போது போபால் ரயில் நிலையத்தில் ஊழியராக பணியாற்றிய ஒருவர் விஷவாயு கசிவின்போது நூற்றுக்கணக்கானோரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
அதனால் இந்தத் தொடருக்கு ‘தி ரயில்வே மென்’ (The Railway Men) என பெயரிடப்பட்டுள்ளது. நவம்பர் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ள இந்தத் தொடரை பாலிவுட்டின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அறிவிப்பு வீடியோ:
» ‘மார்கழி திங்கள்’ முதல் ‘கூழாங்கல்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
» நவ.21 ஓடிடியில் வெளியாகிறது ‘லியோ’ - ஆனால் இது வேறு ‘லியோ’