ஓடிடி திரை அலசல் | Sapta Sagaradaache Ello - Side A: மனதை உருக்கும் காதல் மட்டுமல்ல..! 

By செ. ஞானபிரகாஷ்

வழக்கமான நம் வாழ்விலிருந்து விலகி எங்கோ நடக்கும் போதைப்பொருட்கள் கடத்தல், விதவிதமான துப்பாக்கிகள், கொலைகள் என அடங்கிய மிதமிஞ்சிய உலகை திரையில் தரிசித்து வந்த நிலையில் நிஜத்தை காட்டி கண்ணில் கண்ணீரையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கியிருக்கிறார்கள் ‘சப்த சாகரடாச்சே எல்லோ – சைட் ஏ’ (Sapta Sagaradaache Ello - Side A | ஏழு பெருங்கடல்களுக்கு அப்பால் - பக்கம் ஏ) ). கன்னடத்தில் வெளியாகி தற்போது தமிழிலும் காணக் கிடைக்கும் இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.

பெரிய பணக்காரர் வீட்டு கார் டிரைவர் மனுவுக்கும் (ரக்‌ஷித் ஷெட்டி), பாடல் கலையை கல்லூரியில் கற்கும் பிரியாவுக்கும் (ருக்மணி வசந்த்) இடையிலான காதல் திருமணத்தை நோக்கி நகர்கிறது. பெங்களூரில் வசிக்க வீட்டை தேடி அலையும் பயணத்தில், திருமணத்துக்கு முன்பாக வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் தந்து கனவில் இருக்கின்றனர். மனு டிரைவராக பணிபுரியும் பணக்காரர் வீட்டு பையன் காரை வேகமாக செலுத்தி ஒருவரைக் கொல்கிறான். அப்பழியை நாயகன் தனது காதல் வாழ்க்கைக்காக - சொந்த வீட்டில் வசிக்கும் விருப்பத்துக்காக ஏற்கிறான்.

அதைத் தவிர்க்க நாயகி கூறுகிறார். சிறிது காலம்தான் என சிறைக்கு செல்கிறான். இச்சூழலில் பணக்காரர் இறந்து போக பொறுப்புகள் மனைவிக்கும் பையனுக்கும் வருகிறது. பரமபத ஆட்டத்தால் மனு - பிரியா வாழ்க்கை நிலைகுலைகிறது. அனைவரும் மனுவையும், பிரியாவையும் கைவிட பத்தாண்டு சிறைத்தண்டனை அனுபவிப்பது முதல் பாகத்திலும், இரண்டாம் பாகத்தின் முன்னோட்டத்தை இறுதிக் காட்சிகளிலும் கவிதை போல் காண்பித்து படத்தை முடித்துள்ளனர்.

தனது காதலி பாடகி என்பதால் அவர் பாடும் பாடலை கேசட்டின் "ஏ" சைடில் கேட்டு விட்டு பிறகு டேப் ரிக்கார்டரில் இருந்து பி சைடு மாற்றுவது போல் தலைப்பையும் வைத்துள்ளனர். முதல் பாகத்தையும் அமைத்துள்ளனர்.

கொலைப்பழியை நாயகன் தனது காதலியின் சொந்த வீடு விருப்பத்துக்காக ஏற்பதன் மூலம் தனது காதலை வெளிப்படுத்த, "வேகமாக வண்டியை ஒட்டாதே ஏதாவது நடந்தால் உன்சம்பளத்தில் 80 ஆண்டு உழைப்பு போய்விடும்" எனக் கூறும் காதலியும் தங்கள் காதலை வெளிப்படுத்தும்போதே மனதில் ஒட்டிக்கொள்கிறார்கள்.மனு, பிரியாவை "குட்டி" என செல்லமாக அழைக்க, பிரியாவோ தனது காதலன் மனுவை "கழுதை" எனச் செல்லமாக கூறுவதை படம் முழுக்க இயக்குநர் ஹேமந்த் ராவ் பரவவிட்டுள்ளார்.

மனுவின் வீடு, பிரியாவின் வீடு என தொடங்கி பெங்களூரில் இருக்கும் ஒவ்வொரு வகையான வீடுகளும், அதில் விரியும் வீடுகள் மீதான நடுத்தர, ஏழை மக்களின் கனவும் படத்தை இயல்பாக உறுத்தாமல் நகரச் செய்கிறது.சிறையிலோ, வீட்டிலோ முகம் எதிரே சிரித்து பின்னால் வேறு முகம் காட்டுவோரின் ஆட்டத்தால் வாழ்க்கையே மாறி போவதுடன்...சிறையில் மனுவின் நகர்வுகளும் கலக்கலாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

சிறையில் மனுவிடம் மற்றொரு சிறைவாசி பேசும், அந்த சில நிமிட காட்சிகள் படத்தை வேறு தளத்துக்கு கொண்டு செல்கிறது. அதுபோல் பல வசனங்களிலும் மணிரத்னத்தின் டச் தெரிகிறது. பிரியா சிறு வயதில் கடலோரம் வசித்த வீட்டையும், கடலையும் விட்டு பெங்களூர் வந்தது, கடல் அலையை தன்னுள் புதைத்த சங்கு, நெரிசல் மிகுந்த பெங்களூர் குடியிருப்புகள், நீதிமன்றத்தில் காத்திருக்கும் நேரத்தில் பிரியாவும் மனுவும் சந்திக்கும் காதல் காட்சிகள் என இந்தப் படத்தை ரசிப்பதற்கான காட்சிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இப்படத்தை பாதியில் நிறுத்தி வைத்து பிறகு பார்க்கலாம் என்ற நினைவே உருவாகாமல் காட்சிகளை அழகாக்கி, இறுதி காட்சிகளில் அடுத்த பாகத்துக்கான காத்திருப்பை உருவாக்கி ஏங்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஹேமந்த் எம்.ராவ். படத்தின் இசையும் காதல் உணர்வுகளை பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார் இசையமைப்பாளர் சரண்ராஜ்.

மனு தனது வீட்டில் ஒடுக்கமான கம்பிகள் அடங்கிய குடியிருப்பில் நுழையும் காட்சிகள், காரில் வேகமாக பயணிக்கும் காட்சிகள், பெங்களூருவின் சாலைக் காட்சிகள், சிறை காட்சிகள், சிறையில் நூல் உற்பத்தி கூடம் என ஒளிப்பதிவில் ஜாலம் காட்டியுள்ளார் அத்வைதா குருமூர்த்தி.உறவுகளின் உணர்வுகளை, சிறு, சிறு கதாபாத்திரங்களின் பிரதிபலிப்புகளை கண்களை அகல விடாமல் ரசித்து பார்க்க வைத்திருக்கிறார்.

மனு - பிரியா கண்களில் தெரியும் காதல், அன்பை அனைவருக்கும் பரவவிடுவது இப்படி ஒரு படத்தைப் பார்த்து ரொம்ப நாளாச்சு என்ற எண்ணத்தை மனதில் விதைத்து சென்ற கிளாசிக் பட வரிசையில் இடம் பிடித்துள்ளனர். இந்தத் திரைப் பார்வையைப் படிக்கும்போது, கதை முழுவதும் தெரிந்துவிட்டதே என்பது போல் நினைக்கலாம். ஆனால், படத்தின் ஒவ்வொரு காட்சிகளும், சம்பவமும் தருகின்ற அனுபவம் ஒவ்வொன்றும் தனித்துவமானது என்பதை பார்வையாளர்கள் உணர்வது நிச்சயம்.

"சைடு பி"யான அடுத்த பாகத்தை வரும் அக்டோபர் 27-ல் தமிழில் டப் செய்து தைரியமாக திரையரங்குகளில் படக்குழுவினர் வெளியிடலாம் என்பதே நிதர்சனம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE