சென்னை: சந்தானம் நடிப்பில் ஆக்ஸ்ட் மாதம் வெளியான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.
அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ‘லொள்ளு சபா’ ராம்பாலா இயக்கிய ‘தில்லுக்கு துட்டு’ படவரிசையில் மூன்றாம் பாகமாக உருவான இப்படத்தில் சுரபி, ‘லொள்ளு சபா’ மாறன், மொட்டை ராஜேந்திரன், முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த ஆஃப்ரோ இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இப்படம் கடந்த ஜூலை 28ம் தேதி திரையரங்கில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹீரோவாக சந்தானத்துக்கு இப்படம் ஒரு கம்பேக் ஆக அமைந்ததாக ரசிகர்கள் பாராட்டினர். இந்த நிலையில் இப்படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.