தலா 5 மரம்

'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வரும் வாசகர் திருவிழா கோவை, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலியைத் தொடர்ந்து திண்டுக்கல் நாயுடு மகாஜன நல அறக்கட்டளை திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் இயற்கை விவசாயி ஆர்.ஆர்.ராஜசேகரன் பேசியதாவது:

ஒரு ஆண்டாக 'தி இந்து' தமிழ் அற்புதமாக வந்து கொண்டிருக்கிறது. நல்ல செய்திகளை தருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த வாரம் பெய்த மழையில் பாதிப்புகள் ஏற்படுவதற்கு கண்மாய்கள், கால்வாய்கள் காணாமல்போனதே காரணம். இதுவரை இல்லாத அளவு மழை பெய்ததாக கூறுவதை ஏற்க முடியாது. இதற்கு முன்பும் இதேபோல் மழை பெய்துள்ளது. இப்போது பாதிப்பு அதிகமாவதற்கு நீர்நிலைகள் அழிக்கப்பட்டது தான் காரணம். மரம் வளர்ப்பிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

இயற்கை வனத்தில் தான் வன விலங்குகள் வாழும். இயற்கை வனம் அழிக்கப்பட்டதால் அரிய விலங்கினங்கள் மறைந்துவிட்டன. விலங்குகள் வசிக்கும் பகுதிகள் அழிக்கப்பட்டு அந்த இடங்களில் மனிதர்கள் குடியேறி வருகின்றனர்.

இயற்கை வனத்தின் முக்கியத்துவம் குறித்து, 'தி இந்து' தமிழ் நாளிதழ் அடிக்கடி கட்டுரைகள் வெளியிட்டு, சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் முக்கிய பங்காற்றுகிறது. இயற்கை வனங்களை ஒருபோதும் அழிக்கக்கூடாது. மாணவர் ஒவ்வொருவரும் 5 மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE