'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தமிழகத்தின் மாநகரங்களில் நடத்தப்பட்டுவரும் வாசகர் திருவிழா கோவை, புதுச்சேரியைத் தொடர்ந்து திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள புனித வளனார் கல்லூரி (செயின்ட் ஜோசப் கல்லூரி) ஜூப்ளி அரங்கில் நேற்று நடைபெற்றது.
அறிஞர் பெருமக்களின் பலதுறை சார்ந்த கருத்துகளை கேட்டுக் கொண்டிருந்த வாசகர்களைக் கலகலப்பாக்க வந்தார் நடிகர் பாஸ்கி. தனது தொடர்ச்சியான நகைச்சுவை மழைக்கிடையே நேர் மறையான கருத்துகளை வாசகர்கள் மனதில் விதைத்தார்.
அவர் பேசுகையில், "வாழ்க்கையில் முன்னேற வேண்டுமெனில் உங்களை மட்டம் தட்டுபவர்களுக்கு மாலை போடுங்கள். அவர்களது விமர்சனத்தைப் புறந்தள்ளிவிட்டு அதையே உங்களது முன்னேற்றத்துக்கான உந்து சக்தியாக ஆக்கிக்கொள்ளுங்கள். என்னையும் பலர் இப்போதுவரை விமர்சித்துக்கொண்டுதான் உள்ளனர். அதை நான் ஒதுக்கி வைத்துவிட்டு எனது பணிகளை தொடர்ந்து செய்து முன்னேறிக் கொண்டிருக்கிறேன்.
புதுப்புது விஷயங்களை அறிமுகம் செய்யும் 'தி இந்து' தமிழை படியுங்கள், வாழ்க்கையை பாஸிட்டிவாக அணுகுங்கள். வெற்றி உங்களைவிட்டு எங்கும் போகாது" என்றார்.