'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தமிழகத்தின் மாநகரங்களில் நடத்தப்பட்டுவரும் வாசகர் திருவிழா கோவை, புதுச்சேரியைத் தொடர்ந்து திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள புனித வளனார் கல்லூரி (செயின்ட் ஜோசப் கல்லூரி) ஜூப்ளி அரங்கில் நேற்று நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் பேசியபோது, "தொடர்ச்சியான படப்பிடிப்பு காரணமாக எனக்கு உடல்நிலை சரியில்லை. எனினும் இது எனது குடும்ப விழாபோல் கருதி தவிர்க்க விரும்பாமல் வந்துள்ளேன்.
'தி இந்து'வில் நான் எழுதிய ஃப்ளாஷ் பேக் தொடர் தேசிய விருது பெற்ற படத்தை எடுத்தபோது கிடைத்த அறிமுகத்தைவிட பெரிய அறிமுகத்தை எனக்கு கொடுத்தது. எனது கட்டுரையை பேருந்துகளில், வீடுகளில், கடைகளில் பலர் ஒட்டி வைத்துள்ளனர்.
நான் இதுவரை அறியாத காந்தியைப் பற்றிய பல தகவல்களை காந்தி ஜெயந்தியன்று 'தி இந்து' தமிழ் வழங்கியது. பல கட்டுரைகளை நேரமின்மை காரணமாக படிப்பதற்காக பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். திகட்டத் திகட்டத் செய்திகளை, தகவல்களை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் 'தி இந்து' ஆசிரியர், செய்தியாளர்கள் குழுவை மனமார பாராட்டுகிறேன். விரைவில் 'தி இந்து'வில் அடுத்த ஃப்ளாஷ் பேக் தொடர் எழுத உள்ளேன்" என்றார்.