பொதுமக்களின் குரலாய் ஒலிக்கும் ‘மத்யமர்

சமூக வலைதளங்கள் என்றாலே பொழுது போக்குக்குத்தான் என்ற எண்ணத்தை மாற்றிக்காட்டியிருக்கிறது 'மத்யமர்' எனும் முகநூல் குழு. பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என அதன் நிறுவனத் தலைவர் ஷங்கர் ராஜரத்தினத்தை கேட்டபோது,

“இது எழுத்தாளர் சுஜாதா பிரபலப் படுத்திய வார்த்தை. வசதியானவர்களுக்கு பல விஷயங்களை அந்த வசதியும் செல்வாக்குமே சாதித்துக் கொடுத்து விடுகிறது. இடைப்பட்ட மனிதர்களின் பிரச்சினைகளை யாரும் செவி சாய்த்துக்கூட கேட்பதில்லை. காரணம் அவர்கள் வீதிக்கு வரத் தயங்குபவர்கள். அமைதியாக எல்லா சுமைகளையும் ‘நமக்கு விதிச்சது அவ்வளவுதான்’ என புலம்பிக்கொண்டே கனவுகளோடு மட்டும் வாழ்ந்துவிட்டு போய்விடுகிறார்கள்.

அதே சமயம் சமூக நெறிகளுக்கு உட்பட்டு ஓரளவு நேர்மையுடன் வாழும் வர்க்கம் இவர்கள்தான். ‘மத்யமர்’ என்ற பெயரில் இவர்களை ஒருங்கிணைத்து இந்த அமைப்பு நடுத்தர வர்க்கத்தின் குரலாய் ஒலிக்கவேண்டும் என்பதே எங்களது நோக்கம்” என்றார்.

இதுகுறித்து ‘மத்யமர்’ நிர்வாகக் குழு உறுப்பினர் சுவாமிநாதன் கூறியதாவது: ஒரே வருட காலத்தில் சுமார் 20,000 உறுப்பினர் களைக் கொண்ட குழுவாக வளர்ந்ததோடு மட்டுமல்லாமல் இணையத்தில் எல்லோரா லும் அதிகம் கவனிக்கப்படும் குழுவாக தன்னை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது. பிரபல எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், மருத்துவர்கள், பல்வேறு துறையைச் சார்ந்த நிபுணர்கள், திரைப்பட பிரபலங்கள் முதல் ஆட்டோ ஓட்டுநர்கள், சில்லறை வியாபாரிகள் உள்ளிட்ட சாமானியர்கள் என்ற பலதரப்பு மக்களும் இதில் தீவிர உறுப்பினர்கள்.

மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இதில் அறுபது சதவீத உறுப்பினர்கள் பெண்கள். தொடங்கிய நாள் முதலே, இந்தத் தளம் கண்ணியம் மிகுந்த இடமாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம் என்றார்.

இதுகுறித்து மற்றொரு நிர்வாகக் குழு உறுப்பினர் கீர்த்திவாசன் கூறும்போது, “ஞாயிறுதோறும் சுவாரஸ்யமான ஒரு தலைப்பினைக் கொடுத்து உறுப்பினர்களை அதைப் பற்றி எழுத சொல்லி இன்று ‘மத்யமர்’ ஒரு எழுத்து பாசறையாகவே மாறிவிட்டது. இதைத் தவிர இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளிச்சம் என்றொரு நேரடி காணொலி நிகழ்ச்சியை முகநூல் மூலமே வெற்றிகரமாக நடத்துகிறோம்” என்றார்.

‘மத்யமர்’ தன் முதலாம் ஆண்டு விழாவை சென்னையில் அண்மையில் கொண்டாடியது. நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

குழு உறுப்பினர்களின் உதவியோடு கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு கணிசமான பொருளுதவியும் களப்பணியும் செய்ததைப் பற்றி ‘மத்யமர்’ ஆஸ்தான வரைகலைஞர் ரேவதி பாலாஜி நினைவு கூர்ந்தார்.

அது கொடுத்த ஊக்கமே மத்யமர் அறக்கட்டளையின் தோற்றம் என்றும் இதைக்கொண்டு மாநகராட்சி பள்ளிக் குழந்தைகளின் கல்வியில் உதவி மற்றும் ஏழைக்குழந்தைகளின் வளர்ச்சியிலும் மத்யமர்களின் எதிர்காலப் பங்கினை பற்றியும் விவரித்தார் நிர்வாகக் குழு உறுப்பினர் மீனாட்சி ஒலகநாதன்.

மத்யமரில் வெளிவந்த சிறுகதைகளில் சிறந்த சிலவற்றை தொகுத்து ‘மத்யமர்’ பதிப்பகத்தின் மூலம் ஒரு புத்தகத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்கள். எழுத்தாளர் பாஸ்கரன் ஜெயராமன் வெளி யிட திரையிசை பிரபலம் அபஸ்வரம் ராம்ஜி முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

மத்யமர் பதிப்பகம், மத்யமர் அறக்கட் டளை, மத்யமர் இணையதள டிவி, மத்யமர்.காம் ஆகியவை இந்த ஆண்டில் பெரும் எழுச்சியோடு செயல்படும். இது மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை தோற்றுவித்திருக்கிறது என்பதே நிஜம் என்று நிறுவனர் ஷங்கர் தன் உரையில் குறிப்பிட்டார்.

‘மத்யமர்’ இணைய முகவரி: www.facebook.com/groups/Madhyamar

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE