இப்படிக்கு இவர்கள்: எதற்கு இந்த விளம்பரம்?

By செய்திப்பிரிவு

‘எழுத்தாளர் எனும் ஏமாளி’ (02.05.22) கட்டுரையைப் படித்தேன். சமீப காலமாகப் பதிப்பாளர் எனக்குக் காசோலை அனுப்பிவிட்டார், பணம் தந்துவிட்டார் என சில எழுத்தாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும் பார்த்தேன். எழுத்தாளர் பணம் பெறுவது நல்ல விஷயம்.

ஒவ்வொரு நிதி ஆண்டு முடிவிலும் விற்பனையாளர்களிடம் கணக்கு முடித்து, விற்றதற்கான பணத்தைப் பதிப்பாளர்கள் பெற்றுக்கொள்வது வழக்கம். தமிழ்நாட்டின் சில பதிப்பகங்கள் நிதி ஆண்டு முடிவில் எழுத்தாளர்களுக்குப் பணம் தரும் வழக்கத்தை வைத்துள்ளன. ஆனால், வழக்கத்துக்கு மாறாக பதிப்புரிமை சார்ந்து உரிமைத்தொகை தந்தது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் திடீரென வருவது, எல்லா எழுத்தாளர்களுக்கும் உரிமைத்தொகை கிடைப்பதில்லை என்பதையே மீண்டும் சுட்டிக்காட்டுகிறது.

எல்லாருக்கும் கிடைக்கும்போது, இதுபோல் சமூக வலைதள விளம்பரம் தேவைப்படாது. மேலும், ஒரு பேச்சுக்கு எல்லா எழுத்தாளர்களும் உரிய காலத்தில் உரிமைத்தொகையைப் பெற்றுவருகிறார்கள் என்றாலும்கூட, அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டு பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன? அவருடைய உழைப்புக்கு உரிய தொகையைத்தானே அவர் பெறுகிறார்?

- அ.நடராசன், திருச்சி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE