தனிமனிதரின் மாண்பைக் காப்பதும் அரசின் கடமைதான்!

By ஜி.செல்வா

“மனித உரிமை மீறல்கள் தொடர்பான சம்பவங்களில் எந்த விதமான சமரசங்களையும் இந்த அரசு மேற்கொள்ளாது” எனத் தமிழ்நாடுமுதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசியிருந்தார். அடுத்த சில நாள்களிலேயே தஞ்சாவூரில் நடந்த ஒரு சம்பவம், அவரது வார்த்தைகளின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் கடையநல்லூர் கிராமத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்த அரவிந்த்சாமி, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் எம்.பில்., படிப்பில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் ஏப்ரல் 24 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அரவிந்த்சாமி பங்கேற்றார். ஊரின் முதல் பட்டதாரி என்கிற பெருமையும், பூரிப்பும் உள்ளத்தில் பொங்க உறவினர்கள், ஊர்க்காரர்கள் புடைசூழ அவர் வந்திருந்தார்.

களையப்பட்ட உள்ளாடை: ஆனால், திடீரெனக் காவல் துறையினர் அம்மாணவரை விழா அரங்கத்தில் இருந்து வெளியே அழைத்துச்சென்று, மின் இணைப்பு அறையில் சிறைப்படுத்தினர். விசாரணை என்கிற பெயரில் தலைமுடி முதல் முழங்கால்வரை அணுஅணுவாக அவரைச் சோதனை செய்தனர். பட்டம் வாங்குவதற்காக அவர் அணிந்திருந்த சிறப்பு ஆடை உள்ளிட்ட உடைகள் முழுமையாகக் கிழித்து அவிழ்க்கப்பட்டன. உள்ளாடை கறுப்பு நிறத்தில் இருந்ததைக் கண்டுபிடித்த காவலர்கள், ‘கறுப்பு எதிர்ப்பின் நிறம்’ என்பதால், அதையும் கழற்றிப் பரிசோதித்தனர்.

பட்டமளிப்பு விழா முடியும்வரை அறையில்அடைத்துவைத்து, நிகழ்ச்சி முடிந்ததும் காவல் வாகனத்தில் அவரை அழைத்துச்செல்லவும் முயன்றனர். கையறுநிலையிலிருந்த அரவிந்த்சாமி கூச்சல் போட்டதும், அங்கு கூடியிருந்த மாணவர்களும் வேறு சிலரும் காவல் துறையினரின்நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனினும், அன்று மாலைதான் காவல் துறையின் கட்டுப்பாட்டிலிருந்து அரவிந்த்சாமி விடுவிக்கப்பட்டார்.

இதில் நகைமுரண் என்னவெனில், எந்த ஆளுநரின் பாதுகாப்புக்காக இந்த அத்துமீறல் நடந்த நிலையில், அவரது உதவியாளரேஇதையெல்லாம் கேள்விப்பட்டுத் தலையிட்டபிறகுதான் அரவிந்த்சாமியிடம் அவரது பட்டத்தைக்கொடுத்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம்.

காரணம் என்ன? - இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர், செயற்பாட்டாளர் எனும் முறையில் மாணவர்களின் உரிமைகளுக்காகப் பல்கலைக்கழக வளாகத்தில் பலமுறை போராட்டங்களில் ஈடுபட்டவர்அரவிந்த்சாமி. ஆளுநர் கலந்துகொண்ட அந்நிகழ்ச்சியில் அவரால் குழப்பம் நேரிட்டுவிடுமோ என்று பயந்த காவல் துறை, அப்பட்டமான மனித உரிமை மீறலை நிகழ்த்தியிருக்கிறது.

ஆனால், அதே வளாகத்தில் ஆளுநரின் கருத்தியல் செயல்பாடுகளுக்கு எதிராகப் போராடிய / போராடுகின்ற அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். அவர்களால் வராத பிரச்சினை ஒரே ஒரு மாணவரால் மட்டும் வந்துவிடும் எனக் காவல்துறையினர் எப்படிக் கருதினர் எனத் தெரியவில்லை.

விடையில்லாக் கேள்விகள்: பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும் தற்போதைய தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், சிலஆண்டுகளுக்கு முன்னர் விமானத்தில் பயணம் செய்தபோது, சோபியா எனும் மாணவி பாஜகவுக்கு எதிராக முழக்கம் எழுப்பினார்.

விமானம் தரையிறங்கியதும் பாஜக பிரமுகர்கள் சோபியாவையும் அவரது குடும்பத்தினரையும் விமானநிலையத்தைவிட்டு வெளியே வரவிடாமல் தடுத்தனர். அந்த மாணவிமீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் அந்நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்தனர்.

மாணவி சோபியாவுக்காக அன்று குரல் கொடுத்தவர்கள், மாணவர் அரவிந்த்சாமிக்கு இன்றுகுரல் கொடுக்காமல் மெளனம் காப்பது ஏன் எனப் புரியவில்லை. அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள், ஜனநாயகத்தின்மீதான அக்கறையும், அறம் சார்ந்த விழுமியங்களும் கொண்டவர்களாக இருந்தால் மட்டும் போதாது. குடிமக்கள்மீது அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறை ஏவப்படும்போதெல்லாம் அதைத் தடுக்க முயல வேண்டும்.

மனித உரிமை மீறல்களுக்குக் காரணமான உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் சட்டத்தின்வழி தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஆனால்,அது நடைபெறுவதில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையஅறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய உயர் அதிகாரிகள்மீது இன்றுவரை வழக்குப் பதிவுசெய்யப்படவில்லை.

செய்ய வேண்டியது என்ன?: மனித உரிமை மீறல்கள் தொடர்கதை ஆவதைத் தடுத்திட, இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் உயர் அதிகாரிகளைச் சட்ட வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும். மனித உரிமை மீறல்கள் சட்டத்தின் ஆட்சியை, ஜனநாயக மாண்புகளைச் சீர்கெடுக்கும் என்பதை உணர்ந்து, தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

மாணவர் அரவிந்த்சாமியின் மனஉளைச்சலைப் போக்கும் வகையில், தமிழ்நாடு அரசாங்கம் உரிய கௌரவத்தோடு அவருக்குப் பட்டத்தை வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒரு தனிமனிதரின் மாண்பும் ஜனநாயக உரிமையும் ‘சட்டத்தின் ஆட்சி’யின் பெயரால் பறிக்கப்படும்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், உரிமை பறிக்கப்பட்ட, ஒடுக்குமுறைக்கு உள்ளான மனிதரின் பக்கம் நின்று செயலாற்றுவதுதான் மக்களாட்சியின் அடிப்படைப் பண்பு.

To Read in English: It’s also govt duty to safeguard individual dignity and rights

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE