இராக்கில் அல்-ஷாம், ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாதிகளின் படைகள் நிகழ்த்தும் தாக்குதல்கள் இராக் நாட்டுக்கு மட்டுமல்ல, அரபு நாடுகள் அனைத்துக்குமே அச்சுறுத்தலாகும். மோசுல் நகரம் வீழ்ந்தது நல்லதல்ல. இராக்கில் பிரதமர் நூரி அல்-மாலிகி தலைமையிலான அரசு வலுவாகச் செயல்படவில்லை. இராக்கின் உயரிய மதத் தலைவரான அயதுல்லா அலி சிஸ்தானி தன்னுடைய ஆதரவாளர்களையும் ஷியா பிரிவு முஸ்லிம்களையும் அரசிடம் ஆயுதம் பெற்று ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துச் சண்டையிடுமாறு அறைகூவல் விடுத்திருக்கிறார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற அமைப்பில் சன்னி பிரிவினர்தான் இருக்கின்றனர். இராக்கிய மக்கள் தொகையிலும் இவ்விரு பிரிவினரும் இருக்கின்றனர். அல் கொய்தா இயக்கத்திலிருந்து தோன்றியதுதான் ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது. ஆனால், அது அல் கொய்தாவைவிட வேகமாகச் செயல்படுகிறது. எனவே, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை ஆபத்தானது என்றே எல்லோரும் கருதுகின்றனர். இராக்கில் சண்டையிடும் எவராவது எங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஈரான் எச்சரித்திருக்கிறது.
மோசுல் நகரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நெருங்கியதுமே அங்கிருந்த 30,000-க்கும் மேற்பட்ட அரசுத் துருப்புகள் எதிர்த்துச் சண்டையிடாமல் ஆயுதங் களுடன் தப்பி ஓடிவிட்டனர். எனவே, அரசு எதிர்ப்பாளர்கள் அந்த நகரைப் பிடித்து விட்டனர். பிடித்ததல்லாமல், 12-க்கும் மேற்பட்டவர்களைப் பொது இடங்களில் கொன்று மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர். ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் தெற்கு நோக்கி ஐ.எஸ்.ஐ.எஸ். படையெடுத்தால், ரத்தக்களரி ஏற்படும், ஏராளமானோர் இறந்துவிடுவர் என்று எல்லோரும் அஞ்சுகின்றனர்.
சவூதி அரேபியாவும் ஈரானும் இணைந்து இராக் பிரதமர் நூரி அல் மாலிக்கின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். தெஹ்ரானில் அரசுக்குத் தலைமை தாங்க சதாம் உசைன்போல வலுவான தலைவர் வேண்டும்.
டான் - பாகிஸ்தான் பத்திரிக்கை