சிறப்புக் கட்டுரைகள்

அமெரிக்காவின் புதிய ஆட்டம்:  என்னவாகும் உலகப் பொருளாதாரம்?

கோ.ஒளிவண்ணன்

2001 செப்டம்பர் 11இல் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தகக் கட்டிடமான இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட போது, உலகமே அமெரிக்காவுக்குத் துணைநின்றது. இன்று, உலக நாடுகள் மீது அமெரிக்கா அறிவித்துள்ள இறக்குமதிக்கான தீர்வை, பல உலக நாடுகளை இணைத்து இத்தனை காலமாகக் கட்டி அமைத்திருந்த உலக வர்த்தக அமைப்பை அதுவே தகர்த்துவிட்டதோ என எண்ண வைக்கிறது. மற்ற நாடுகள் அனைத்தும் அமெரிக்காவைத் தனிமைப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.

குமுறும் வல்லரசு: கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்​காவின் வெளிநாட்டு வணிகப் பரிவர்த்​தனையில் வரவுக்கும் செலவுக்கும் இடையில் சமநிலை இல்லாமல், செலவு பல மடங்கு அதிகமாக உள்ளது. ஒரு நாட்டின் இறக்குமதி அதிகரித்து ஏற்றுமதி குறையும்​போது, இந்நிலை ஏற்படு​கிறது.

இதனால் அமெரிக்கா பெரும் கடன் சுமையில் தள்ளப்​பட்​டுள்ளது. வளர்ந்து​வரும் மூன்றாம் உலக நாடுகளில் இவ்வாறு பிரச்சினை ஏற்படுவது இயல்பானது. ஆனால், உலகப் பொருளா​தா​ரத்தில் முதன்​மையான இடத்தில் இருக்கும் அமெரிக்கா​வுக்கு அப்படி அல்ல.

இரண்டாம் உலகப் போர் முடிந்த​போது, உலகளவில் அமெரிக்​காவின் கை ஓங்கி​யிருந்தது. உலக உற்பத்​தியில் ஏறக்குறைய பாதி அமெரிக்கா வசம் இருந்தது. இப்போது அது 16% ஆகக் குறைந்து​விட்டது. மற்ற நாடுகள் தங்கள் உற்பத்தித் திறனை வளர்த்​துக்​கொண்டது ஒரு காரணம். அமெரிக்​காவில் ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கான செலவைவிட, பல மடங்கு குறைந்த விலையில் தயாரிக்​கக்​கூடிய ஆற்றலும் மனித வளமும் பிற நாடுகளில் உருவானது இரண்டாவது காரணம்.

அத்துடன், மக்களின் சமூகப் பாதுகாப்பு, மருத்​துவம், நாட்டின் பாதுகாப்பு எனத் தனது வருவாயின் பெரும் பகுதியை (ஏறக்​குறைய 67%) செலவழிக்​கிறது. இதற்கிடையில் வியட்​நாம், ஆப்கானிஸ்​தான், இராக் போன்ற பல போர்களில் ஈடுபட்​ட​தால், பெரும் பொருட்​செலவைச் சந்தித்தது.

வீட்டிலோ, நாட்டிலோ வருவாய்க்கு மீறிச் செலவுகள் தொடர்ச்சியாக அதிகரிக்​கும்​ போது, புதிதாக வருவாயைப் பெருக்க​வில்லை என்றால், ஏதேனும் ஒரு கட்டத்தில் அதிரடியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நிலை உருவாகிறது.

அதைத்தான் அமெரிக்கா இப்போது செய்துள்ளது. “எங்கள் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்​படும் பொருள்​களுக்குப் பிற நாடுகள் விருப்​பம் போலத் தத்தம் நாட்டில் தீர்வை விதித்து தங்களைப் பாதுகாத்​துக்​கொண்டு, இன்று எங்களைப் பெரும் இன்னல்​களில் ஆழ்த்​தி​ உள்ளன. எங்களுடைய நட்பு நாடுகளே இதில் முக்கியப் பங்கு வகித்​துள்ளன” என்று டிரம்ப் குமுறி​னார். நியாயம்​தானே?

சங்கிலித் தொடர் பாதிப்பு: தற்போதைய அதிரடி நடவடிக்கைகளால் பலன்கள் கிடைத்து, அமெரிக்கா மீண்டு வந்தால் நன்மை​தான். ஆனால், நடைமுறையில் இது அவ்வளவு எளிதல்ல. இத்தனை காலம் உலகத்தைக் காக்க வந்த ரட்சகராக நடந்து​கொண்​ட​தால், பல்வேறு நாடுகள் அமெரிக்காவை முழுமை​யாகச் சார்ந்​திருந்தன. எனவே, அமெரிக்​காவின் பொருளாதார வீழ்ச்சி பல நாடுகளையும் ஒட்டுமொத்தமாக உருக்​குலையச் செய்யக்​கூடும்; குறிப்பாக, அமெரிக்காவின் எல்லை நாடுகளான கனடா, மெக்ஸிகோ இரண்டும் கடும் பாதிப்பைச் சந்திக்​கும்.

பல நாடுகள் உற்பத்திச் செலவைக் குறைக்க, தங்கள் தொழிற்​சாலைகளை இவ்விரு நாடுகளில் அமைத்துப் பொருள்களை உற்பத்தி செய்து, அமெரிக்கா​வுக்குள் அனுப்பு​கின்றன. பொருள்கள் குறைந்த விலையில் அமெரிக்​கர்​களுக்குக் கிடைத்​தா​லும், இது நாட்டின் பொருளா​தா​ரத்​துக்குத் தீங்கு விளைவிக்​கிறது. முக்கியமாக, அந்நியச் செலாவணி இழப்பும் உள்நாட்டு வேலைவாய்ப்பு இழப்பும் ஏற்படு​கின்றன.

சென்ற நூற்றாண்​டிலும், உலகம் இதேபோன்ற வரலாறு காணாத பொருளா​தாரச் சரிவைச் சந்தித்தது. நிதிமுறிவு ஏற்பட்டு பல நாடுகள் வீழ்ச்சி அடைந்தன. இரண்டாம் உலகப் போருக்கே அது தொடக்கப் புள்ளியாக அமைந்தது. 96 ஆண்டுகள் கழித்து, இன்று உலகம் மீண்டும் அதே நிலையைச் சந்திக்​கக்​ கூடிய சாத்தி​யங்கள் உள்ளன.

ஆனால், பல நாடுகளிடையே அணு ஆயுதங்கள் குவிந்துள்ளதால் உலகப் போர் வெடிக்கும் வாய்ப்பு குறைவு. அதே நேரத்​தில், புவிசார் அரசியலில் ஆச்சரியமான மாற்றங்கள் ஏற்படக்​கூடும். ‘அமெரிக்கா இல்லை​யென்றால் என்ன? ஏன் மற்ற நாடுகள் தங்கள் உற்பத்​தியைத் திருப்​பி​விடக் கூடாது?’ எனப் பல நாடுகள் யோசிக்கத் தொடங்கும்.

இந்நிலையில், முக்கியமான ஒன்றை நாம் மறக்கக் கூடாது: நாடுகளுக்கு இடையிலான வணிகம், உண்மையில் அந்தந்த நாட்டில் உள்ள முதலீட்டாளர்களின் வணிகமே. பல முதலீட்டாளர்கள் உலகளவில் நிறுவனங்களை வைத்திருப்பவர்கள். அவர்கள் இப்போதே தங்கள் பொருள்களுக்குப் புதிய சந்தைகளை வேறு நாடுகளில் தேடத் தொடங்கியிருப்பார்கள். இதுவரை பகை நாடுகளாக இருந்தவர்கள் ஒன்றுகூடும் வாய்ப்பு உள்ளது; நண்பர்கள் பிரியலாம்.

அமெரிக்காவின் நட்பு நாடுகளாக, குறிப்பாகக் கிழக்காசியப் பகுதிகளில் பாதுகாப்பு அரண்களாக விளங்கும் தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இப்போது சீனாவுடன் இணைந்து தீர்வை எதிர்கொள்வது எனத் தீர்மானித்துள்ளன. அமெரிக்காவுக்கு இது பெரும் பின்னடைவு.

இது ஒருவேளை நடந்துவிட்டால், அமெரிக்கா ஆசிய பசிபிக் பெருங்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை இழக்க நேரிடலாம். உலக நாடுகள் நீண்ட காலமாக அமெரிக்க டாலரைப் பன்னாட்டு வர்த்தகத்துக்கான நம்பகமான கருவியாகப் பயன்படுத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியான வீழ்ச்சி, அமெரிக்காவுக்கே இன்னும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகள் அமெரிக்கா​வுக்கு உதவுமா? - நிச்சயமாக உதவாது. காரணம், உள்நாட்டு உற்பத்​திக்குத் தேவையான தொழில்கள் அமெரிக்​காவில் தயாராக இல்லை; முதலீடு செய்யும் நிதிநிலை பாதிக்​கப்​பட்​டுள்ளது; மற்ற நாட்டின் முதலீட்​டாளர்​களும் முன்வர மாட்டார்கள். உள்நாட்டு உற்பத்​திக்காக, வெளிநாட்​டிலிருந்து கச்சாப் பொருள்கள் மற்றும் உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய வேண்டிவரும். அவற்றுக்கும் தீர்வை வரி சேர்க்​கும்​போது, உற்பத்திச் செலவு அதிகரிக்​கும். இந்தோ​னேசியா, வியட்நாம் அல்லது திருப்​பூரில் வேலை செய்பவர்​களுக்கு அளிக்கும் ஊதியத்தைவிட, அமெரிக்​கர்​களுக்குப் பல மடங்கு ஊதியம் கொடுக்க வேண்டி​யிருக்​கும்.

இதன் விளைவாக, உள்நாட்டில் உற்பத்​தி​யாகும் பொருள்​களின் விலை உயர்ந்தே இருக்​கும். இதனால், அமெரிக்கச் சாமானியர்கள் நேரடி​யாகப் பாதிக்​கப்​படு​வார்கள். இப்போது எளிதாக வாங்கிக்​கொள்​வதுபோல் இருக்கும் பொருள்​களுக்கு, இனிக் கூடுதலான விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க’ பொருளா​தாரக் கொள்கை முடிவுகளை எடுத்​தவர்​களுக்கு இதெல்லாம் தெரியாதா?

நிலைமை மாறுமா? - ஒருவகை​யில், உலக வர்த்​தகத்தை அமெரிக்கா ஒட்டுமொத்​த​மாகக் கலைத்​துள்ளது. எல்லாரும் என்ன செய்வது என்று கவலையோடும் கோபத்​தோடும் பரிதவிக்க, அமெரிக்கா மீண்டும் நாடுகளை ஒவ்வொன்றாக அழைத்து, தக்கவாறு புதிய ஒப்பந்​தங்களை உருவாக்க வாய்ப்பு இருக்​கிறது எனப் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்​றனர். இதனை உண்மை​யாக்கும் விதமாக, தீர்வை உயர்வை நடைமுறைக்குக் கொண்டு​வருவதை 90 நாள்களுக்கு டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.

இந்தியாவைப் பொறுத்​தவரை, அமெரிக்​காவின் மொத்த இறக்கும​தியில் நமது ஏற்றும​தியின் பங்கு 2.8% என்பதால், நாம் எவ்வாறு நடந்தாலும் அவர்களுக்குப் பெரிதாகப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால், நமது ஏற்றுமதி வணிகத்தில் அமெரிக்கா முன்னணி வகிக்​கிறது (ஏறக்​குறைய 18%).

இது தடைபட்​டால், நமது பொருளா​தாரம் கடுமை​யாகப் பாதிக்​கப்​படும். மேலும், நமது நாட்டில் அதிக வேலைவாய்ப்பு​களையும் வருவாயையும் தருவது கணினி மென்பொருள் துறை. அமெரிக்​காவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்​டால், இங்குள்ள பல கணினி நிறுவனங்கள் மூடப்பட வேண்டிய சூழல் வரும். சீன–அமெரிக்க வணிக உறவு சீர்குலை​யும்​போது, இந்தியா​வுக்குப் பெரும் வாய்ப்பு உள்ளதாகப் பலர் நினைக்​கிறார்கள். அது தவறு. இந்தியா உற்பத்தித் துறைகளில் பெருமளவு பின்தங்​கி​யுள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்​நுட்​பத்​திலும் நாம் இன்னும் தொடக்க நிலையில்தான் இருக்​கிறோம். ஆண்டு​தோறும் பல லட்சக்​கணக்கான பட்டதாரிகள் உருவா​னாலும், மிகக் குறைவானவர்களே திறன் வாய்ந்​தவர்களாக இருக்​கின்​றனர். இதற்காகப் புதிய பாடத்​திட்​டங்​களை​யும், செயல்​முறைக் கல்​வியையும் வடிவ​மைத்தால் ​நாம் விடிவுக் ​காலத்தை எதிர்​பார்​க்​கலாம்.

- தொடர்புக்கு: olivannang@gmail.com

SCROLL FOR NEXT