தடுமாறும் தாய் பல்கலைக்கழகம்

By ஆனந்தன் செல்லையா

இந்தியாவில் உயர் கல்வி வசதிகளை உருவாக்க வேண்டும் என்கிற திட்டத்தில் ஆங்கிலேயர்கள் இறங்கிய​போது, முதல்​கட்டமாக முக்கியமான மூன்று நகரங்​களில் பல்கலைக்​கழகங்கள் தொடங்​கப்​பட்டன. 1857இல் தொடங்​கப்பட்ட சென்னைப் பல்கலைக்​கழகமும் அவற்றில் ஒன்று. தென்னிந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்​கழகங்​களுக்கு இதுவே தாய். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சர் சி.வி.ராமன், அப்துல் கலாம் போன்றோர் இதன் முன்னாள் மாணவர்கள். இத்தகைய பின்புலம் கொண்ட பல்கலைக்​கழகம் விரைவில் மூடப்​படுமோ எனப் பேச்சு அடிபடும் அளவுக்குக் கடந்த இரண்டு ஆண்டு​களாகப் பல்வேறு சிக்கல்கள் நிலவு​கின்றன.

அதிகார மோதல்: தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்​.ரவிக்கும் இடையே நடந்து​வரும் அதிகார மோதல், பல்கலைக்​கழகங்​களின் செயல்​பாடு​களிலும் எதிரொலிக்​கிறது. சென்னைப் பல்கலைக்​கழகம் ஓராண்​டுக்கும் மேலாகத் துணைவேந்தர் இன்றி இயங்கிவரும் நிலைக்கும் இந்த முரண்பாடே முதன்மைக் காரணமாகக் கூறப்​படு​கிறது. இந்திய அரசமைப்புச் சட்டப்படி, அரசுப் பல்கலைக்​கழகங்​களுக்கு வேந்தராக உள்ள மாநில ஆளுநர், இணைவேந்தராக உள்ள உயர் கல்வித் துறை அமைச்சர், துணைவேந்தர் ஆகியோர் அதிகாரப் படிநிலை வரிசையில் முன்னணி வகித்​தா​லும், நடைமுறையில் அந்தந்த மாநில அரசுகள்தான் பல்கலைக்​கழகத்தின் அன்றாடச் செயல்​பாடு​களில் உரிமை செலுத்துவதாக உள்ளன.

துணைவேந்தர் இல்லாததன் விளைவு: சென்னைப் பல்கலைக்​கழகத் துணைவேந்தர் எஸ்.கௌரி ஆகஸ்ட், 2023இல் ஓய்வு பெற்றார். தமிழ்நாடு சட்டமன்​றத்தில் நிறைவேற்​றப்பட்ட தனிச் சட்டம்தான் துணைவேந்தர் நியமனத்​துக்கு அடிப்படை. அதன்படி உருவாக்​கப்​படும் நியமனக் குழுதான் புதிய துணைவேந்தரை நியமிக்​கும். இக்குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி ஒருவரைச் சேர்க்க வேண்டும் என ஆளுநர் ரவி வலியுறுத்​தியதை ஒட்டிச் சிக்கல் ஏற்பட்டது.

இது மாநில அரசுக்கும் ஆளுநருக்​குமான மோதலாக மாறி, நீதிமன்​றத்தில் வழக்குத் தொடுப்​பதுவரை சென்றது. தற்போதுவரை துணைவேந்தர் நியமிக்​கப்​பட​வில்லை. உயர் கல்வித் துறைச் செயலர் முதலான மூவர் குழு, துணைவேந்தர் பொறுப்பைக் கையாள்​கிறது. எல்லாக் கோப்பு​களும் இம்மூவரின் பார்வைக்கும் தனித்​தனி​யாகச் சென்று​வரும் நிலை.

அனைத்து வேலைகளும் தாமதம் ஆகின்றன; முக்கியமான முடிவுகள் எடுக்கத் தயங்கும் சூழலும் ஏற்பட்​டுள்ளதாக ஆசிரியர் அமைப்புகள் கூறுகின்றன. தேர்வுக் கட்டுப்​பாட்டு அலுவலரும் பொறுப்பு அதிகாரி​தான். துணைவேந்தர் இல்லாததால் பட்டமளிப்பு விழாவும் தள்ளிப்​போனது. பல மாணவர்கள் படித்து முடித்தும் பட்டம் பெற முடிய​வில்லை. அவர்கள் உயர் கல்விக்கோ, வேலைக்கோ விண்ணப்​பிப்​பதும் சிக்கலுக்கு உள்ளானது.

ஆசிரியர் பற்றாக்குறை: 540 பேர் ஆசிரியர்​களாகப் பணிபுரிய வேண்டிய நிலையில், 193 பேர் மட்டுமே இங்கு உள்ளனர். ஆசிரியர் அல்லாத பணியாளர்​களில் 1,417 பேர் இருக்க வேண்டிய நிலையில் 460 பேர் மட்டுமே இருப்​ப​தாகவும் ஆசிரியர் / பணியாளர் சங்கங்கள் கூறுகின்றன. கௌரவ ஆசிரியர்​களையும் ஒப்பந்தப் பணியாளர்​களையும் கொண்டு பல்கலைக்கழக நிர்வாகம் பற்றாக்​குறையைச் சமாளித்​துக்​கொண்​டிருக்​கிறது.

சில துறைகள் ஓராசிரியரைக் கொண்டும் ஈராசிரியரைக் கொண்டும் இயங்கு​கின்றன. கௌரவ ஆசிரியர்​களுக்குச் சம்பளம் கொடுப்​பதும் சில முறை தடைபட்டது. கடந்த மூன்று மாதங்களாக ஒப்பந்தப் பணியாளர்​களுக்குச் சம்பளம் அளிக்​கப்​பட​வில்லை எனக் கூறப்​படு​கிறது. இவர்களில் தூய்மைப் பணியாளர்​களும் அடக்கம்.

சென்னைப் பல்கலைக்​கழகத்தின் கீழ் 133 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 91 சுயநிதிக் கல்லூரிகள். பல்கலைக்கழக மானியக் குழு நிர்ண​யித்த ஊதியத்தைக் கொடுக்க​வில்லை எனக் கூறி அக்கல்​லூரி​களின் ஆசிரியர்களை செனட் தேர்தலில் பங்குபெற விடாமல் சென்னைப் பல்கலைக்​கழகம் முன்பு தடுத்தது. ஒரு பல்கலைக்​கழகமாக அது எடுக்​கப்பட வேண்டிய சரியான நடவடிக்கை​தான்.

ஆனால், தனது ஆசிரியர்​களுக்கே உரிய காலத்தில் சம்பளம் கொடுக்க இயலாத நிலை இந்தப் பல்கலைக்​கழகத்​துக்கு ஏற்பட்டது. ஓய்வு​பெறும் ஆசிரியர்​களுக்கு மாதந்​தோறும் ஓய்வூ​தியம் மட்டும் வழங்கப்​படு​கிறது. கருணைத்தொகை உள்ளிட்ட பிற ஓய்வூ​தியப் பலன்கள் 2018இலிருந்து நிலுவையில் உள்ளன. முழுமையான ஓய்வூ​தியப் பலன்களைக் கேட்டுப் போராடிவரும் ஆசிரியர் அல்லாத பணியாளர்​களில் 37 பேர் முதுமை காரணமாக இறந்து​விட்​டனர்.

பல்கலைக்​கழகமா? தனியார் நிறுவனமா? - ஓய்வூ​தியம், ஆராய்ச்சி போன்ற​வற்றுக்கான நிதியை ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோ​ருக்குச் சம்பளம் கொடுக்கப் பல்கலைக்​கழகம் பயன்படுத்​தியது, இன்னொரு பிரச்​சினைக்கு வழிவகுத்தது. தணிக்கை அறிக்கையில் இது ஆட்சேபிக்​கப்​பட்டதை முன்வைத்து, பல்கலைக்​கழகத்​துக்கு வழங்கும் நிதியை மாநில அரசு குறைத்தது. பல்கலைக்​கழகத்தின் செலவில் பாதிக்கும் மேல் அரசின் ஒதுக்கீடு இல்லாத நிலை ஏற்பட்டது.

இதைக் காரணம் காட்டி வருமான வரித் துறை, சென்னைப் பல்கலைக்​கழகத்தைத் தனியார் நிறுவன​மாகக் கருதி, அதற்கேற்ப வரி விதித்தது. முந்தைய 3 ஆண்டு​களாகப் பல்கலைக்​கழகம் 424 கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாக வருமான வரித் துறை 2024 தொடக்​கத்தில் நோட்டீஸ் அனுப்​பியது. இதனால் பல்கலைக்​கழகத்​துக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் முடக்​கப்​பட்டன.

இந்தியாவில் எந்த ஓர் அரசுப் பல்கலைக்​கழகமும் வருமான வரித் துறையால் இப்படி நடத்தப்​பட்​ட​தில்லை. இந்தப் பிரச்சினை பின்னாள்​களில் தீர்க்​கப்​பட்டு​விட்​டாலும், பல்கலைக்​கழகத்தின் நற்பெயர் கேள்விக்​குள்​ளானது. மாநில அரசுக்கு மத்திய அரசு ஏற்படுத்தும் மறைமுக நெருக்​கடி​யாகவும் இது பார்க்​கப்​பட்டது.

தமிழக அரசின் பாராமுகம்: ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான மோதலோடு, பல ஆண்டு​களாகவே தமிழ்நாடு அரசு பல்கலைக்​கழகத்​திடம் பாராமுகமாக இருந்து வருவதும் பின்னடைவுக்கு இட்டுச்​சென்​றுள்ளது. நிர்வாகத்தில் குளறுபடி இருப்பின் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, விசாரணைக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு தீர்வுகாண முடியும். சில ஆண்டு​களுக்கு முன் இதே சென்னைப் பல்கலைக்​கழகத்தில் நிர்வாகப் பிரச்​சினைகள் எழுந்தன. அப்போது ஐஏஎஸ் அதிகாரியான அசோக் வர்தன் ஷெட்டி அரசால் பிரத்​யேகமாக நியமிக்​கப்​பட்டுத் தீர்வு காணப்பட்ட நிகழ்வை ஒரு முன்னு​தா​ரண​மாகக் கல்வி ஆர்வலர்கள் கூறுகின்​றனர்.

“சென்னைப் பல்கலைக்​கழகத்​துக்கு எனத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி பல ஆண்டு​களாகக் குறைக்​கப்​பட்டு​விட்டது. அதன் விளைவுதான் இப்போது எதிர்​கொள்​ளப்​படு​கிறது. பல்கலைக்​கழகத்​துக்குத் தேவையான நிதியைத் தமிழக அரசு அளிக்க வேண்டும். தனியார் பல்கலைக்​கழகமாக இருந்த அண்ணா​மலைப் பல்கலைக்​கழகம் கடுமையான நிதி, நிர்வாக நெருக்​கடிக்கு உள்ளாகி​யிருந்த நிலையில், தமிழக அரசு அதற்குப் பொறுப்​பேற்றுக்​கொண்டு, 2013இல் அதை அரசுப் பல்கலைக்​கழகம் ஆக்கியது. அந்தப் பிரச்​சினையோடு ஒப்பிடு​கை​யில், சென்னைப் பல்கலைக்​கழகம் எதிர்​கொண்​டிருப்பது எளிய பிரச்​சினை​தான்” என்கிறார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் காந்திராஜ்.

பொற்காலமும் பொறுப்பு​களும்: சென்னைப் பல்கலைக்​கழகம் உள்பட அரசு உயர் கல்வி நிறுவனங்​களின் தரத்தைத் தக்கவைப்​பதில் ஆளுநருக்கு உள்ள அக்கறை வரவேற்​கப்பட வேண்டியதே. மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்துப் பேசும் சர்க்​காரியா குழு, புஞ்சி குழு ஆகியவை ஆளுநர் பதவியில் இருப்​பவருக்குப் பல்கலைக்கழக வேந்தருக்கான அதிகாரங்​களைப் பல வரம்பு​களுக்கு உட்பட்டே வழங்கு​கின்றன. மாநில அரசின் கட்டுப்​பாட்டுக்குக் கீழ் வரும் பல்கலைக்​கழகங்​களில் அவற்றின் தனி உரிமையை ஆளுநர் மதிக்க வேண்டும். இதுதான் இந்தியா முழுவதும் பொதுவான நடைமுறையாக உள்ளது.

மருத்​துவரும் கல்வி​யாள​ருமான ஆர்க்காடு லட்சுமணசாமி, சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றில் தடம்ப​தித்த ஒரு துணைவேந்தர். அவரது பணிக்​காலத்தில் மாநில முதல்வராகவே இருப்பினும், பல்கலைக்கழக வளாகத்​துக்குள் நுழைவதை முடிந்த வரை தவிர்க்கும் சூழல் இருந்தது. பல்கலைக்​கழகம் அரசியலுக்கு அப்பாற்​பட்டதாக இருக்க வேண்டும் என நினைத்​ததோடு, அதை உறுதியோடு செயல்​படுத்​துபவ​ராகவும் லட்சுமணசாமி இருந்​தார். காமராஜர், பக்தவத்சலம் போன்ற​வர்​கள்கூட, லட்சுமணசாமியின் கொள்கைக்கு மதிப்பு அளித்து முதிர்ச்​சி​யுடன் நடந்து​கொண்​டனர். இத்தகைய முன்னோடிகள் பணிபுரிந்த இடம் இது.

புத்தொளி பாயட்டும்: துணைவேந்தர் இல்லாமலே சென்னைப் பல்கலைக்​கழகத்தின் 166ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்று முடிந்​துள்ளது. உயர் கல்வித் துறைச் செயலர், துணைவேந்தர் பொறுப்பில் செயல்​பட்​டுள்​ளார். இது மிக அரிதான நடைமுறை. எனினும் நீண்ட காலமாகக் காத்திருந்த 1,300 மாணவர்கள் பட்டம் பெற்றிருப்பது ஆறுதலை அளிக்​கிறது. முந்தைய பட்டமளிப்பு விழாவில் கலந்து​கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்​டா​லின், “காமராஜரின் ஆட்சி பள்ளிக் கல்வியின் பொற்கால​மாகவும் கலைஞரின் ஆட்சி கல்லூரி​களின் பொற்கால​மாகவும் இருந்​ததைப் போல எனது ஆட்சி உயர் கல்வியின் பொற்காலம் ஆக வேண்டும் எனத் திட்ட​மிட்டுச் செயல்​படுத்​திக்​கொண்​டிருக்​கிறோம்” என்றார்.

ஏழை மாணவர்​களின் உயர் கல்விக் கனவுகளை நிறைவேற்று​வதில் சென்னைப் பல்கலைக்​கழகம் போன்ற​வைதான் முன்னிற்க முடியும். நெருக்​கடியில் சிக்கி​யுள்ள அரசு உயர் கல்வி நிறுவனங்​களுக்குப் புத்தொளி பாய்ச்​சுவதன் மூலம் முதல்வர் ஸ்டாலினின் வார்த்​தைகள் செயல்​வடிவம் பெறட்​டும்​.

- தொடர்புக்கு: anandchelliah@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்