என்னத்தெ கன்னையா

By ஆர்.பி.ராஜநாயஹம்

என்னத்தெ கன்னையா, ‘முதலாளி’ படத் தில் ஒரு பிரதான பாத்திரத்தில் நடித்தார். அதனால், ஆரம்ப காலங்களில் ‘முதலாளி' கன்னையா என அறியப்பட்டிருந்தார்.

‘பாசம்’ படத்தில் இவர் வசன உச்சரிப்பு ‘ப'கரம் வார்த்தைகளை எஃப்-ல் உச்சரிப் பார். என்ன அன்பு, என்ன பாசம், என்ன பரிவு, என்ன பக்தி!' இதை “என்ன அன்ஃபு, என்ன ஃபாசம், என்ன ஃபரிவு என்பார்.

கண்ணதாசனின் ‘கருப்புப் பணம்’ படத்தில் தயாரிப்பாளராக நடித்திருப்பார். நொடித்துப்போன பிறகு, தன் பட இயக்குநரை ஒரு பேருந்து நிறுத்தத்தில் பார்ப்பார். அவர் அங்கே சைட் அடித்துக்கொண்டிருப்பார். இவர் அவரை நெருங்கும்போது அவர், “டோன்ட் டிஸ்டர்ப் மி. ஐயாம் என்ஜாயிங் த பியூட்டி!” என இவரை உதாசீனம்செய்வார். கன்னையா, “யூ ஆர் என்ஜாயிங் த பியூட்டி. பட், ஐயாம் இன் பாவர்ட்டி” என சோகமாகச் சொல்வார். ஆங்கிலம் அறிந்தவர் அல்ல. ஆனால், ஆங்கில வசனங்களை நன்றாக உச்சரிப்பார்.

‘நான்’ படத்தில் நடித்த பின்தான் ‘என்னத்தெ' கன்னையா ஆனார். விரக்தியான மனநிலையில் படம் முழுவதும் வந்தார்.

‘மூன்றெழுத்து' படத்தில் ராமண்ணா இவரை வில்லன் ஆக்கினார். அந்தப் படத்தில் “ஐஸ் வச்சுக் கொன்னுடு” என்று அலட்சியமாக வசனம் பேசுவார் கன்னையா.

‘சொர்க்கம்' படத்தில் நாகேஷ் ஜோசியராக வருவார். கன்னையாவுக்குச் சொன்ன ஜோதிடம் பலித்துவிட, அவர் கோடீஸ்வரர் ஆகி நாகேஷைத் தேடி வருவார். ஏற்கெனவே நாகேஷ் ஒரு முரடனுக்கு ஜோதிடம் சொல்லி அது பலிக்காமல், அந்த முரடன் அவரைத் தேடிவந்து அடி வெளுத்துவிட்டுப் போயிருப்பார். அந்தச் சூழலில் கன்னையா “எங்கையா ஜோதி? மனுஷனா அவன்!” என்று நாகேஷின் ஜோதிட நிலையத்துக்குள் வரவும் நாகேஷ் பயந்துபோய் ஒளிந்துகொள்வார்.

கன்னையா தொடர்ந்து “மனுஷனா அவன்… தெய்வம்! கண்கண்ட தெய்வம்! கைகொடுத்த தெய்வம்!” என்று புகழ ஆரம்பிக்கவும் நாகேஷ் மேஜைக்கு அடியில் இருந்து சந்தோஷமாக எழுந்திருப்பார்.

கன்னையா ஆச்சரியத்துடன் “ஆஹா! நான் பார்த்த படத்திலேயும் படிச்ச புராணத்திலேயும் தெய்வம் மேலேயிருந்து வரும்! ஆனா, இங்கே கீழேயிருந்து வருதே” என்பார் ஆச்சரியமாக.

‘நம் நாடு’ படத்தில் வில்லன் ரங்காராவுக்கு உதவியாளர் கன்னையா. படத்தில் கன்னையாவிடம் “என் வீட்டிலே பசி ஒண்ணைத் தவிர, வேறு எதுவுமே இல்லை” என்று நாகையா சொல்வார். அதற்கு கன்னையா சொல்வார், “இருக்குன்னு சொல்ல அது ஒண்ணாவுது இருக்குல்லே... போய்யா.”

பாரதிராஜா, மகேந்திரன், பாக்யராஜ், எஸ்.பி. முத்துராமன் போன்றவர்கள் இவருக்கு வாய்ப்புக் கொடுத்திருந்தால் இவர் 25 வருடங்களுக்கு முன் மீண்டும் ஒரு நல்ல ரவுண்டு வந்திருப்பார். எம்ஜிஆர் இறந்து இத்தனை வருடம் கழிந்த பின் வடிவேலுவுடன் கன்னையா கலக்கியிருக்கிறார். ‘‘வரும்! ஆனா வராது.”

தி.நகர் ரோகினி இன்டர்நேஷ்னல் லாட்ஜில் ஒருவர் கன்னையாவிடம் என்னை அறிமுகம் செய்தபோது, அவரது பழைய பட வசனங்களை நான் படபடவென்று அவரிடமே பேசிக்காட்டினேன். மனிதர் அசந்துபோனார்.

‘அழைத்தால் வருவேன்' படப்பிடிப்பின்போது உசிலைமணியிடம் ஒப்பனை அறையில் என்னைப் பற்றி ரொம்ப உயர்வாகச் சொன்னார். “இந்த ராஜநாயஹம்! இவரைப் பார்க்கும்போதுதான் எனக்கு உயிர் வாழ்வதுபற்றி ஒரு நம்பிக்கைப் பிடிப்பு வருகிறது.”

வலைப்பூ முகவரி: http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_22.html

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE