‘தி இந்து’ நாளிதழின் நடுப் பக்கத்தில் இடம்பெறும் கட்டுரைகளும் செய்தித் துணுக்குகளும் நவீன வாசகர்களுக்குப் புதிய பார்வையை வழங்கக்கூடியதாகவும் பழைய சிந்தனைகளைப் புதுப்பிக்கும் வகையிலும் அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது. அந்த வகையில், 25.10.2015 தேதியில் தமிழ்த் தாத்தா உ.வே.சா.வைப் பற்றிய ஒரு நல்ல குறிப்பு இடம்பெற்றுள்ளது. அந்தக் குறிப்பில் உ.வே.சா. 1880 அக்டோபர் 20-ல் சேலம் ராமசாமி முதலியாரைச் சந்தித்தார். அந்நாளிலிருந்து பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் உந்துதலுக்கு உ.வே.சா. தள்ளப்பட்டார்.
அப்படி அந்த உந்துதலை அவர் பெற்றபோது அவருடைய வயது 44 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உ.வே.சா. தன்னுடைய 44 வயதில், அதாவது 1899-ல் சீவக சிந்தாமணி, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், புறநானூறு, மணிமேகலை போன்ற புகழ்பெற்ற நூல்களைப் பதிப்பித்துப் பேரும் புகழும் பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1855-ல் பிறந்த உ.வே.சா, 1880-ல் சேலத்தில் ராமசாமி முதலியாரைச் சந்தித்தபோது அவருடைய வயது 25.
- பொ. வேல்சாமி, நாமக்கல்.