சென்னையில் உள்ள தியாகராய நகர் என்கிற பெயருக்குச் சொந்தக்காரரான பிட்டி தியாகராயர் நீண்ட காலப் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர். ஏறத்தாழ நூறாண்டு களுக்கு முன்பு தோன்றிய பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்குக் கால்கோள் இட்டவர்களுள் முக்கியமானவர்.
1852 ஏப்ரல் மாதம் 27ஆம் நாள் பிறந்த தியாகராயர், சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். படிப்பை முடித்த பின்னர் நெசவு, தோல் ஏற்றுமதி உள்ளிட்ட தொழில்களை மேற்கொண்ட தியாகராயருக்கு அரசியலில் ஆர்வம் பிறந்தது. 1884ஆம் ஆண்டு ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் ஆசிரியர் ஜி.சுப்பிரமணியம் உள்ளிட்ட பெருமக்களால் சென்னை மகாஜன சபை என்கிற அமைப்பு தொடங்கப்பட்டது. அதன் உருவாக்கத்தில் தியாகராயர் முக்கியப் பங்கு வகித்தார்.
மக்கள் பிரச்சினைகளை அரசுக்கு எடுத்துச்செல்லும் பணியைச் செய்த இந்த அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினராகத் திறம்படச் செயலாற்றினார் தியாகராயர். இன்றும் இந்தச் சபையின் கட்டிடம் ‘தி இந்து’ நாளிதழ் அலுவலகத்தின் அருகே இருப்பதைக் காணலாம். சிறிது காலம், காங்கிரஸ் கட்சியிலும் இணைந்து பணியாற்றிய தியாகராயர், 1887ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மூன்றாவது அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார்.
மாநகராட்சிப் பணிகள்: சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக 1882ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தியாகராயர் ஏறக்குறைய நாற்பதாண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார். மேலும் அதன் தலைவராகவும் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். அந்த வேளையில், நகரில் கழிவுநீர் அகற்றும் திட்டங்கள், பொதுச் சுகாதாரம், நகர விரிவாக்கம் என்று பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினார். சூளைப் பகுதி, மாம்பலம் ஆகிய பகுதிகளைச் சீர்படுத்தி விரிவுபடுத்தும் பணிகளை மேற்கொண்டார். எனவேதான் மாம்பலம் பகுதிக்குத் தியாகராய நகர் என்று பெயரிட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவ்வாறே பெயரும் சூட்டப்பட்டது.
கல்விப் பணிகள்: தம்முடைய சொத்தில் ஒரு பங்கைக் கல்விப் பணிக்காக அளித்தவர் தியாகராயர். அவரால் தொடங்கப்பட்ட நடுநிலைப் பள்ளி பின்னாளில் கல்லூரியாக வளர்ச்சி பெற்றது. பச்சையப்பன் அறக்கட்டளையின் உறுப்பினராகவும், தலைவராகவும் இருந்த தியாகராயரின் முயற்சியால், அறக்கட்டளை நிதியின் மூலம் செங்கல்வராயர் தொழில்நுட்பப் பயிற்சிக்கூடம் தொடங்கப்பட்டது. தியாகராயரின் கல்விப் பணிகளில் இன்றளவும் நினைவுகூரப்படுவது அவரது மதிய உணவுத் திட்டம்.
பள்ளிகளில் மாணவர் வருகையை அதிகரிக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் ஒரு பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், பின்னர் ஐந்து பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இதன் பயனாக, 1922-23இல் 811ஆக இருந்த இந்த ஐந்து பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை 1924-25இல் 1,671ஆக உயர்ந்தது.
கோயில் திருப்பணிகள்: தியாகராயர் தமது வாழ்நாளில் சென்னையின் பார்த்தசாரதி கோயில், கபாலீசுவரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்குத் திருப்பணி செய்துள்ளார். அதேவேளை நீதிக்கட்சி ஆட்சியின்போது, கோயில்களை நிர்வகிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்து சமய அறநிலையத் துறைச் சட்டம் நிறைவேறுவதிலும் இவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
நீதிக்கட்சியின் தோற்றம்: 1916ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று சென்னை வேப்பேரியில் நடைபெற்ற ஒரு கூட்டம் தமிழ்நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாக அமைந்தது. அதில் தியாகராயர், டாக்டர் நடேசன், டாக்டர் தரவத்து மாதவன் (டி. எம்.நாயர்), எம்.சி.ராஜா, அலமேலு மங்கைத் தாயாரம்மாள், டாக்டர் உஸ்மான் சாயபு உள்ளிட்ட பார்ப்பனரல்லாத தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில்தான் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்று அழைக்கப்பட்ட நீதிக்கட்சி தோன்றுவதற்கான அடித்தளம் இடப்பட்டது. இதனையடுத்து திராவிட இயக்கத்தின் முதல், முக்கிய ஆவணமாகக் கருதப்படும் பார்ப்பனரல்லாதார் அறிக்கை தியாகராயரின் கையொப்பத்துடன் 20.12.1916 அன்று வெளியானது. கல்வி, வேலைவாய்ப்புகளில் பார்ப்பனரல்லாதாரின் நிலை குறித்து விவரித்த இவ்வறிக்கை, அவர்களுடைய முன்னேற்றத்துக்கான வழிமுறைகள் என்ன என்பதைப் பற்றியும் விவாதித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து 1917 டிசம்பர் 28, 29 நாட்களில் சென்னை அண்ணா சாலையில் நீதிக்கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இதன் வரவேற்புக் குழுத் தலைவராக தியாகராயர் பணியாற்றினார். தமது மாநாட்டு உரையில், ராமானுஜர், பசவய்யா போன்றோரை மேற்கோள் காட்டிப் பேசிய தியாகராயர், பார்ப்பனரல்லாதார் முன்னேற வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
நீதிக்கட்சி சென்னை மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, முதலமைச்சர் பதவி இவரைத் தேடி வந்தது. எனினும் அப்பொறுப்பை ஏற்க மறுத்து கடலூர் சுப்பராயலு முதலமைச்சராவதற்குப் பரிந்துரைத்தார். இவ்வாறு பல்வேறு சிறப்புகளைப் பெற்ற தியாகராயர், 28.04.1925இல் மறைந்தார்.
தியாகராயர் மறைந்தபோது, வேறு ஒரு தலைவர் நிரப்ப முடியாத இடத்தை பார்ப்பனரல்லாதார் இயக்கம் இழந்தது என்று ‘தி இந்து’ நாளிதழ் எழுதியது. தற்போதைய சென்னை நகரம் தியாகராயரின் உழைப்பின் பரிணாமம் என்று கூறுவது மிகையாகாது என்று திரு.வி.கல்யாணசுந்தரனார் தமது ‘நவசக்தி’ இதழில் பாராட்டி இருக்கிறார். தியாகராயர் மறைந்து நூறாண்டுகள் ஆனபோதும், சமூகநீதித் தளத்திலும், நிர்வாகத் தளத்திலும் அவரது பணிகள் என்றென்றும் நினைவுகூரப்படும்.
ஏப்ரல் 28: தியாகராயரின் நூறாவது நினைவு நாள்
- தொடர்புக்கு: vetriblackshirt@gmail.com