சிறப்புக் கட்டுரைகள்

நாம் வாசித்தால்தானே குழந்தைகளும் வாசிப்பார்கள்?! - கல்விச் செயல்பாட்டாளர் சாலை செல்வம்

பிருந்தா சீனிவாசன்

எழுத்தாளரும் கல்வியாளருமான சாலை செல்வம், தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் தமிழ்நாடு கல்விக் கொள்கைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். குழந்தைகளின் கல்வி சார்ந்து மதுரையில் இயங்கும் கூழாங்கல் கல்வி ஆய்வு மையத்தின் இயக்குநர் - செயலராக இருந்திருக்கிறார். அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையின் புதுச்சேரி பிரிவில் ஆசிரியர் பயிற்றுநராகப் பணிபுரிந்துவரும் இவர், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர். மாற்றுக்கல்வி சார்ந்து செயல்பட்டுவரும் அவருடனான நேர்காணல்:

தொடக்கத்தில் பெண்கள் சார்ந்து செயல்பட்டுவந்த நீங்கள் சிறார் இலக்கியம், வாசிப்பு சார்ந்து செயல்படத் தொடங்கியது எப்போது? - பெண்களுடன் இணைந்து வேலை செய்வது என்பது குழந்தை​களையும் உள்ளடக்​கியது. பெண்கள் மத்தியில் பணியாற்றுவதற்குக் குழந்தைகளின் மேம்பாடும் அவசியம் என்று தோன்றியபோது கல்வி சார்ந்து பணியாற்றுவது இயல்பாக நடந்தது. அந்தக் காலத்தில் நாம் பயின்​றபோது கிடைத்​ததோடு ஒப்பிட்​ட​தில், வாசிப்பு குறைவாக இருப்பது தெரிந்தது. அந்தக் காலத்தில் நான் படித்த ‘பகல் கனவு’, ‘டோட்​டோ​சான்’, ரஷ்ய இலக்கியமான ‘குழந்தைகள் வாழ்க’ (ஷ. அமோனஷ்​விலி) போன்ற புத்தகங்கள், குழந்தை​களிடம் பெரிய​வர்கள் எப்படி நடந்து​கொள்ள வேண்டும், கல்வித்தளம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தின.

இந்தக் காலத்துக் குழந்தைகளிடம் பள்ளிப் பாடங்களைத் தாண்டிய வாசிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது? - பாடப் புத்தகங்​களையும் கதைப் புத்தகங்​களையும் ஒப்பிட முடியாது. நம்மிடம் ஒரு கதை மரபு இருக்​கிறது. எதையுமே கதையாகக் கேட்டு, வாசித்து, இலக்கிய அனுபவமாகச் சுவைத்து அறிந்து​கொள்​வோம். சிக்கலான விஷயங்​களைக்​கூடக் கதைப் புத்தகங்​களின் வழியாக மிக எளிதாகக் குழந்தை​களிடம் கொண்டுசேர்க்​கலாம் என்பதால் குழந்தைகளை வாசிக்க வைப்பது கடினமாக இருப்​ப​தில்லை. பொதுவாகக் குழந்தைகள், பெரிய​வர்​களைப் பார்த்​துத்தான் பலவற்​றையும் கற்றுக்​கொள்​கிறார்கள்.

நாம் நினைப்​பதுபோல் குழந்தைகள் திறன்​பேசியை எடுப்​பதுபோல் தாங்களாகவே புத்தகத்தை எடுப்​பார்கள் என்று நினைக்கக் கூடாது. படி, படி என்று அறிவுரைபோல் சொல்வதும், ‘புத்தகம் வாங்கிக்​கொடுத்து​விட்​டோம்... படி’ என்பதும் அவர்களை வாசிக்க வைக்காது. அதற்கு நம் முயற்​சியும் தேவை. ஒரு குழந்தை வாசிக்க வேண்டும் என்றால் வீட்டில் பெற்றோரும் பள்ளியில் ஆசிரியர்​களும் வாசிக்க வேண்டும், குழந்தை​களுக்குப் படித்​துக்​காட்ட வேண்டும்.

குழந்தைகள் வாசிக்கும் அளவுக்குத் தரமான சிறார் புத்தகங்கள் தமிழில் இருக்​கின்​றனவா? - குழந்தைகள் வாசிக்க வேண்டும் என்றால் அதற்குச் சில விதிகள் இருக்​கின்றன. ஒன்று தரமான புத்தகங்கள் அல்லது குழந்தைகள் விரும்​பக்​கூடிய புத்தகங்கள். குழந்தைகள் எந்த அளவுக்கு மொழியை அறிந்​திருக்​கிறார்களோ அதற்கேற்பப் புத்தகங்கள் இருக்க வேண்டும். என் சிறு வயதில், என் அம்மா ரஷ்ய மொழிபெயர்ப்பு நூல்களை வாங்கிக்​கொடுத்​தார். அவற்றை நாங்கள் படிக்க வேண்டும் என்று வாங்கி​னாரா அல்லது அதில் வரும் வண்ணப்​படங்​களைக் கொண்ட கதைகள் அம்மாவுக்குப் பிடிக்குமா எனத் தெரியாது.

ஆனால், உலகளாவிய புத்தகங்கள் குழந்தை​களைக் கவரும் வகையில் இருப்​பதைப் போல், தமிழிலும் அதுபோன்ற முயற்சிகள் நடைபெற்று​வரு​கின்றன. தாரா பதிப்பகம் போன்ற சில பதிப்​பகங்கள் தமிழ்ப் புத்தகங்களை ஆங்கிலத்​துக்குக் கொண்டு​செல்வதன் மூலம் அவை உலகளாவிய கவனத்தைப் பெறுகின்றன. அவர்கள் வெளியிட்ட ‘நானும் தொழிலாளி’, ‘பூக்​காரம்மா பொன்னி’, ‘சர்வர் பாபு’ போன்ற எளிய புத்தகங்கள் பரவலாகக் கவனம் பெற்றிருக்​கின்றன.

கல்வித் துறையோடு சேர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்பை ஊக்குவிக்கும் திட்டங்களில் பங்கேற்றது குறித்துச் சொல்ல முடியுமா? - அரசுப் பள்ளி ஆசிரியர்​களோடு இணைந்து குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதும் பணியில் நானும் எழுத்​தாளர் வ.கீதாவும் ஈடுபட்​டோம். ஆசிரியர்களே எழுதி, வரைந்து 96 புத்தகங்களை உருவாக்​கினோம். அவற்றை அரசுப் பள்ளி​களில் சுழற்சி முறையில் தோரணம் போல் தொங்க​விட்​டிருப்​பார்கள். தங்களுக்கு விரும்​பியதைக் குழந்தைகள் வாசிக்க இது நல்ல வாய்ப்பாக அமைந்தது.

‘புத்தகப் பூங்கொத்து’ என்கிற அந்தப் புத்தக வரிசைக்கு முன், அதற்கான கையேட்டைத் தயாரித்​தோம். கிராமங்​களில் குழந்தைகள் பாடுகிற பாடல்கள், அவர்களுக்குள் சொல்லிக்​கொள்ளும் கதைகள், விளையாட்டுகள் போன்ற​வற்​றையும் அந்தப் புத்தகத்தில் சேர்த்திருந்​தோம். அப்பா, அம்மா இருவரைப் பற்றியும் சொல்லும்போது இருவரும் வேறு வேறல்ல, இருவரும் எல்லா வேலைகளையும் செய்யக்​கூடிய​வர்கள் என்று பாலினச் சமத்து​வத்தை வலியுறுத்தியும் எழுதி​யிருக்​கிறோம்.

அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட சிலவற்றைக் காலத்​துக்கு ஏற்ப மாற்றியமைக்​கவும் வேண்டும். புகழ்​பெற்ற ‘தோசை​யம்மா தோசை’ பாடலை, ‘அம்மாவுக்கு ஐந்து, எனக்கு மூணு போதாது, இது அரிசி மாவும் உளுந்து மாவும் கலந்து சுட்ட தோசையல்ல, கடையில் வாங்கின மாவு..’ என்று மாற்றி​யிருப்​போம். எதையுமே விமர்​சித்​துக்​கொண்டே இருப்​ப​தைவிட, அதை மாற்று வடிவங்​களில் தரலாம்.

தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பாக மூன்று ஆண்டு​களுக்கு முன் தொடங்​கப்பட்ட ‘இளந்​தளிர் இலக்கியத் திட்ட’த்​துக்குச் சிறார் எழுத்​தாளர்​களிடம் இருந்து படைப்பு​களைப் பெற்று 200 புத்தகங்கள் வரை வெளியிடப்​பட்​டிருக்​கின்றன. இது தவிர எஸ்.எஸ்.ஏ. திட்டத்​தின்கீழ் வாசிப்பு இயக்கத்தில் 140 புத்தகங்கள் வெளியிடப்​பட்​டிருக்​கின்றன.

சிறார் புத்தகங்களில் பாலினச் சமத்துவப் பார்வை இருக்கிறதா? - நிறைய உண்டு. கமலா பாசின் ‘ஆண்பிள்ளை யார்? பெண்பிள்ளை யார்?’ என்று ஒரு கதை எழுதி​யிருக்​கிறார். அது கதை உணர்வையும் கொடுக்கும்; பாலினச் சமத்து​வத்தைக் குழந்தைகள் எளிதாகப் புரிந்து​கொள்​ளக்​கூடிய வகையிலும் இருக்​கும். பெண்ணால் மரம் ஏற முடியும், ஆணால், தோசை சுட முடியும் என்று சொல்வதன்​மூலம் ஒரு கருத்தைத் திணிப்பதாக இல்லாமல், இதைச் செயல்​படுத்த முடியும் என்று குழந்தைகள் உணரும் வகையில் இருக்​கும்.

‘கூடு’ பெண்கள் வாசிப்​பரங்கம் சார்பாக 15 ஆண்டு​களுக்கு முன் ‘மாதவி​டாய்’ கையேடு ஒன்றை வெளியிட்​டோம். பொதுவாகப் பெண்ணுடலைப் பற்றிய கற்பிதம் இங்கே அதிகம். அதனால், அறிவியல்​பூர்வமான தகவல்​களோடு பலவற்றை விளக்​கினோம். கருப்​பைக்கும் கற்புக்​கும்கூட வேறுபாடு தெரியாதவர்கள் நம்மிடையே உண்டு. கருப்பை என்பது நம் உடலில் இருக்கும் ஓர் உறுப்பு. அதன் வேலைகளைப் பற்றிச் சொல்வதோடு உடல் பாதுகாப்பு, சுகாதாரம் போன்ற​வற்​றையும் இணைத்து அனுபவக் கதைகளாக அதில் வெளியிட்​டோம். மாதவிடாய் குறித்த எதிர்மறை மனநிலையை மாற்றும் வகையில் அந்தக் கையேடு இருந்தது.

அண்மைக் காலமாகப் பெண்கள் முற்போக்காக, நவீனச் சிந்தனையோடு இருக்​கும்போது ஆண்களில் சிலர் பெரியார், அம்பேத்​கரைப் போல் நவீனச் சிந்தனை கொண்ட​வர்களாக இல்லையோ எனத் தோன்றுகிறது. ஆணின் இயலாமையும் அகந்தையும் ஏதோவொரு விதத்​தில், அவர்களோடு பயணிக்கும் பெண்களைப் பாதிக்​கிறது. குடித்து​விட்டு வன்முறை​களில் ஈடுபடுவது, குடும்பப் பொறுப்புகளை எடுத்​துக்​கொள்​ளாமல் இருப்பது என்கிற நிலையில் பெண்ணைவிட ஆணுக்கு நிறைய சொல்ல வேண்டி​யிருக்​கிறது. அதை மனதில் வைத்துத்தான் பதின்பருவ ஆண்களுக்கான புத்தகத்தை எழுதி​யிருக்​கிறேன்.

வாசிப்​புக்காக நீங்கள் நடத்திவரும் அமைப்பு​களின் செயல்​பாடுகள் பற்றிச் சொல்லுங்​கள்... பெண்களின் உரையாடல் வாசிப்பு சார்ந்து, அரசியல் சார்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக மதுரையில் ‘கூடு’ பெண்கள் வாசிப்​பரங்​கத்தை நடத்திவரு​கிறோம். 40 பெண்கள் சேர்ந்து 15 நாள்களுக்கு ஒரு முறை புத்தகத்தை வாசித்து, விவாதிப்பதை வழக்க​மாகச் செய்து​வரு​கிறோம். சமீப ஆண்டுகளாக ‘கூழாங்கல்’ குழந்தைகள் நூலகத்தை நடத்திவரு​கிறோம். குழந்தைகள் சேர்ந்து வாசித்தல், சத்தமாக வாசித்தல், வாசித்ததை உரையாடுதல் என அதன் செயல்​பாடுகள் இருக்​கும்​.

- தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

SCROLL FOR NEXT