சாதி கட்டமைப்பு ஒடுக்கப்படுவோர் மேல் சுமத்துகின்ற இன்னல்களை அனுபவித்த அம்பேத்கர் கல்வியால் பெற்ற பாரிஸ்டர், டாக்டர் பட்டங்களைப் ‘பொருளீட்டுவதற்குப் பயன்படுத்தாமல்’, அவற்றைச் சமூக விடுதலைக்கான பேரறிவாகவும் பேரியக்கமாகவும் உருமாற்றினார்.
ஐரோப்பாவிலிருந்து திரும்பிய பின்னர், அவருடைய இயக்கச் செயல்பாடுகள் பிரிட்டிஷ்-இந்தியாவில் பேரசைவுகளை ஏற்படுத்தின. அம்பேத்கருக்கும் மதராஸ் மாகாணத்தில் செயல்பட்டுவந்த சமூக விடுதலை இயக்கங்களுக்கும் ஆழமான நட்பு உருவானது. அவரை காங்கிரஸ் இயக்கம் விமர்சித்தது; சாதியைப் பேண விரும்பிய வைதீகர்கள் எதிர்த்தனர். அம்பேத்கர் எப்போதும் ஏதோ ஒரு கோணத்தில் பேசப்பட்டார்; இக்காலத்திலும் அது தொடர்கிறது.
முரண்பட்ட நிலைப்பாடுகள்: தொடக்கக் காலத்தில் அவரைத் தமிழில் ‘அம்பெட்கார்’, ‘அம்பரிட்கார்’ என எழுதினர். அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் இருந்த கருத்தியல் ஒற்றுமையால் அவரது ஒவ்வொரு அசைவும் ‘குடி அரசு’ பத்திரிகையில் வெளியாகின. நாசிக் சமத்துவ சங்கம் மே 1929இல் நடத்திய கூட்டத்தில் ‘டாக்டர் அம்பெட்கார்’ ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசிய தலைமைப் பேருரையை 1929இல் ‘குடி அரசு’ வெளியிட்டது. இதுதான் தமிழில் முதலில் வெளியான அம்பேத்கரின் பேச்சு என ஊகிக்கலாம்.
அம்பேத்கர் தனித்தொகுதி, இரட்டை வாக்குரிமை கோரிக்கைகளை முன்னெடுத்ததாலும் இவற்றை காந்தியும் காங்கிரஸும் எதிர்த்ததாலும் மதராஸ் மாகாணத்தில் இவர்களுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கொந்தளித்தன. இக்கோரிக்கையை முதலில் எம்.சி.ராஜா முன்னெடுத்தபோது, அம்பேத்கர் அதைக் கவனப்படுத்தவில்லை. அதன் அவசியத்தை உணர்ந்து அம்பேத்கர் அதைக் கைக்கொண்டபோது, எம்.சி.ராஜா அதைக் கைவிட்டார். இதனால் ஒடுக்கப்படுவோர் இயக்கங்களுக்குள்ளேயே முரண்பட்ட நிலைப்பாடுகள் உருவாகின.
1930களில் ஒரு வாரப் பத்திரிகையில் கேலிச் சித்திரங்கள் வழியாகவும் அம்பேத்கருக்கான எதிர்வினைகள் வெளிப்பட்டன. அவற்றில் ஒரு கேலிச்சித்திரம், ஒடுக்கப்பட்டோர் ‘தீண்டாமை’ என்கிற எரிகிற வீட்டிலிருந்து தப்பிக்க, எம்.சி.ராஜா போன்றோர் முன்வைக்கும் ‘கலப்புத் தொகுதி’ என்கிற வாகனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; ‘தனித்தொகுதி’ என்கிற முதலைகளின் பிடியில் உள்ள குளத்தில் விழுந்துவிடக் கூடாது என அறிவுறுத்தியது.
தனித் தொகுதியை ‘குடி அரசு’ இதழும், சுயமரியாதை இயக்கமும், அதன் நன்னிலம் தாலுகா மாநாடும் (07 ஜூன் 1931), பொதுவுடைமை இயக்கமும் ஆதரித்தன. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் பி.டி.ரணதிவே எழுதி ‘ஜனசக்தி’ 1945இல் வெளியிட்ட ‘ஆறு கோடி தீண்டாதார்’ நூலில் தனித் தொகுதியை ஆதரித்திருந்தார்.
வசிப்பிடம், தண்ணீர்த் தொட்டி, இடு/சுடுகாடு எனப் பொது நிறுவனங்கள் அவர்களுக்கெனத் தனியாகக் கட்டமைக்கப்பட்டுள்ளபோது, இரட்டை வாக்குரிமையும் தனித் தொகுதியும் இக்காலத்துக்கும் அவசியம் என்கிற கோரிக்கை தவிர்க்க இயலாதது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இதற்கென மதுரையில் 22.01.2005இல் மாநாடும் நடத்தினார்.
மதம் என்ன சட்டையா? - தீண்டாமைக் கொடுமையால் ஒடுக்கப்படுகின்ற மக்கள் மாற்று மதத்தைத் தழுவ வேண்டும் என அம்பேத்கர் அறைகூவல் விடுத்தார். மஹம்மதிய, கிறிஸ்துவாதி மதங்களில் தீண்டாதார் பிரவேசிப்பது கண்டிக்கத்தக்க தென்றும், அங்கு போனாலும் தீண்டாதார் ஒதுக்கியே வைக்கப்படுவதாயும், இந்து மதத்திலிருந்து கொண்டே உரிமைகளுக்குப் போராட வேண்டும் என்றும் இரட்டைமலை சீனிவாசனும் எம்.சி.ராஜாவும் அம்பேத்கருடன் முரண்பட்டனர்.
‘பிற மதஸ்தர்களுக்குச் சமூக சமத்துவ விஷயத்தில் நமது உயர் சாதி மக்கள் அளிக்கும் உரிமைகூட, தங்கள் சொந்த இந்து மதத்தையே சேர்ந்தவர்களான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிக்கவில்லை யென்றால் அது மிகவுங் கொடுமையல்லவா! என்று நாம் கேட்கிறோம்’ என ‘ஆனந்த போதினி’ தலையங்கம் தீட்டியது.
இருப்பினும், ‘நினைத்தபோது போட்டிருக்கும் சட்டையைக் கழற்றியெறிந்துவிட்டு வேறு சட்டையை மாட்டிக்கொள்வதுபோல் மதம் சட்டையல்ல என்பதைத் தாழ்த்தப்பட்ட வகுப்பாரும் டாக்டர் அம்பேத்கரும் அறிய வேண்டுமென்று நாம் விரும்புகிறோம்’ என மதமாற்றத்தை எதிர்த்தது.
மதராஸ் மாகாணத்தில் அம்பேத்கருக்கு முன்னரே ஒடுக்கப்படுவோர் கிறிஸ்துவத்தையும் இசுலாமியத்தையும் சுயமாகத் தழுவியதாலும், அயோத்திதாசர் ‘தமிழ் பெளத்த’த்தை முன்னெடுத்ததாலும் அம்பேத்கரின் மதமாற்ற அறைகூவலை அம்மக்களும் பெரியாரும் ஆதரித்தனர். அம்பேத்கரைப் பின்பற்றி பெளத்தத்தைத் தழுவுவது இயக்கமாக இக்காலத்திலும் உயிரோட்டமாக இருக்கிறது.
மசோதாவும் மகளிரும்: நிலவுடைமைச் சாதிப் பெண்கள் அனுபவிக்கின்ற இன்னல்களைத் தீர்க்க இந்துச் சட்டத்தில், “பலதார மணம் கூடாது, சொத்தில் பெண்களுக்குப் பங்கு வேண்டும், விவாகரத்து செய்ய பெண்களுக்கும் உரிமை உண்டு” என்பது போன்ற திருத்தங்களை அம்பேத்கர் முன்மொழிந்தார். இவற்றை அக்காலத்திலேயே பெண்கள் தொடர்ந்து கோரிக்கைவிடுத்து வந்தனர். அம்பேத்கரின் இத்திருத்தங்களை ஆதரித்து ‘திராவிட நாடு’ 1950 ஏப்ரலில் தலையங்கம் எழுதியது.
சில மாநிலங்களில் செயல்பட்ட மாதர் சங்கங்களைப் போல், 1950இல் அம்பேத்கரின் பிறந்த நாளிலேயே சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற திமுக பெண்கள் மாநாட்டிலும் அம்பேத்கரின் திருத்தங்களை உடனடியாக நிறைவேற்றக் கோரித் தீர்மானம் நிறைவேற்றினர்; தினமும் ஏராளமான தந்திகளையும் அனுப்பினர். 1951 அக்டோபர் தலையங்கத்தில், இந்துப் பெண்களுக்கு மேன்மையளிக்கும் சட்டம் இது எனச் சுட்டிக்காட்டி, ‘அறிஞர் டாக்டர் அம்பேத்கரின் இந்து சட்டத் திருத்த மசோதா இந்தியப் பாராளுமன்றத்தில் இறுதியாகக் கைவிடப்பட்டது’ என ‘திராவிட நாடு’ வருந்தியது.
மதிவாணனும் சம்பந்தனும்: காலனிய காலத் தமிழ் அச்சு ஊடகங்கள் பெண், ஆண் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டன. ‘திராவிட நாடு’ பத்திரிகை ஜூலை 1950இல் ‘படிப்பகம்’ பக்கத்தில், மதிவாணனின் ‘டாக்டர் அம்பேத்கர்’ என்ற நூலை ஆம்பூர் கஸ்பா அம்பேத்கர் பதிப்பகத்தில் கிடைக்கும் எனக் குறிப்பிட்டது.
அம்பேத்கரின் வரலாற்றைத் தமிழில் எழுதிய முதல் நூல் இதுவாகக்கூட இருக்கலாம். கல்விக்கான ஒரு மாத இதழில், 1951இல் முன் அட்டையில் அம்பேத்கர் நிற்கின்ற முழு நிழற்படமும், ‘டாக்டர் அம்பேத்கர், இந்திய யூனியன் சட்ட மந்திரி’ என்ற தலைப்பிட்டு வெளியானது.
‘டாக்டர் - அம்பேத்கர்’ என்ற தலைப்பில் தெ.பா.சம்பந்தன் எழுதிய இக்கட்டுரை 8 பக்கங்களைக் கொண்டது. உலக அறிஞர் அகராதியில் அம்பேத்கர் வாழ்க்கை ஒரு சோக நாடகம், ‘ஒடுக்கப்பட்டோரை ஓரணியில் திரட்டிய இதய ஜோதி’, ‘படிப்பில் மாணிக்கம்’ என்று வர்ணித்து அம்பேத்கருடைய The Problem of the Rupee என்ற அரிய புத்தகத்தை உலகப் பொருளாதார வித்தகர்கள் பாராட்டியதைச் சுட்டுகிறார்.
வழக்கறிஞர் தொழிலைச் செய்ததில் அவர் அனுபவித்த இடையூறுகளை விவரித்து, அவரையும் அவருக்கு உதவிய பிராமணரையும் வழக்கறிஞர்கள் சிலர் கடுஞ்சொற்களால் திட்டியபோது அம்பேத்கர் சற்று கோபமாகவே, “ஒருநாளைக்கு நான் இந்த நாற்காலியில் உட்காரத்தான் போகிறேன்.
அப்போது நீங்கள் என்னை என் பிரபுவே (My Lord) என்று கூறத்தான் போகிறீர்கள்” என்று சொன்னதாகவும் 1942இல் அம்பேத்கருக்கு நீதிபதி பதவி கிடைத்ததாகவும், ஆனால் அவர் அதை நிராகரித்ததாகவும் குறிப்பிடும் சம்பந்தன், ‘அதைச் செய்திருந்தால் அவர் சபதம் நிறைவேறி இருக்குமல்லவா?’ என வினவுகிறார்.
‘ஆண்டவனால் செய்யப்பட்ட ஓர் ஏற்பாட்டை – தீண்டாமையை - ஒரு சாதாரண மனிதர் சட்ட விரோதமானதாக்கிவிட்டார் எனக் காங்கிரஸ் பத்திரிகைகள் ‘நம் கால மனு’ என எழுதின. தீண்டாமை நீடித்தாலும் அதை வேண்டுமென மேடையேறிக் கூற இயலாத நிலையை அம்பேத்கர் உருவாக்கிவிட்டார்’ என சம்பந்தன் கூறுகிறார். அம்பேத்கரின் பேரறிவு ஒடுக்கப்படுவோருக்கும் ஒடுக்குவோருக்கும் விடுதலைக் கருவிகளாகப் பரிணமித்து ஓயாத அலையாய் வீசுகிறது.
- தொடர்புக்கு: ko.ragupathi@gmail.com