இயற்கை வேளாண்மை குறித்து தமிழ்நாட்டில் பரவலாகப் பேச்சு இருக்கிறது. வேதிக் கலப்பற்ற காய்கறிகளை வாங்கப் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். என்றாலும் விளைபொருள்களின் விலை, விநியோகம் போன்றவற்றில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. சமீபத்தில் நான் நெதர்லாந்துக்குச் சென்றிருந்தபோது, நஞ்சில்லாத காய்கறி உற்பத்தி / நுகர்வு முறையால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி நேரடியாக அறிந்துகொள்ள முடிந்தது. அவை, நம்மூருக்கும் பொருத்தமானவைதான்.
கல்லூரித் தோழிகளின் முன்னெடுப்பு: அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நஞ்சில்லாத காய்கறிகளை வாங்கச் சிறந்த வழியாக இருப்பது ‘சமூகம் ஆதரிக்கும் வேளாண்மை’ (Community Supported Agriculture). இயற்கை முறையில் உணவு உற்பத்தி செய்பவர்கள் தனியாகவோ, கூட்டாகவோ சொந்த / குத்தகை நிலத்தில் காய்கறிகள், பழங்களை உற்பத்தி செய்கிறார்கள்; வீடுகளுக்குச் சென்றோ அல்லது மையமான இடங்களுக்குக் கொண்டுசென்றோ அவற்றை விநியோகிக்கிறார்கள். இதற்கு வேளாண் பருவம் தொடங்கும் முன்னரே நுகர்வோர் பணம் செலுத்தி உறுப்பினராகிவிட வேண்டும். நெதர்லாந்தில் இது சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது.
நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமுக்கு மேற்கே 13 கி.மீ. தொலைவில் ‘De Stadsgroenteboer’ என்கிற காய்கறித் தோட்டம் கடந்த ஏழு ஆண்டுகளாகச் செயல்படுத்தப்படுகிறது. கல்லூரித் தோழிகள் ஐந்து பேர் கூட்டாக இதை நடத்துகின்றனர். ஆரம்பத்தில் நஞ்சில்லாத உணவை விரும்பும் நெருங்கிய நண்பர்கள் சிலரின் தேவைக்கான உற்பத்தியாகத்தான் இது தொடங்கியது. பின்னர், அதன் நன்மையை உணர்ந்த மக்களின் ஆதரவால் இத்திட்டம் விரிவடைந்தது.
எப்படிச் செயல்படுத்துகிறார்கள்? - நெதர்லாந்தில் டிசம்பர் முதல் மார்ச் வரை கடும் குளிர் நிலவும். அந்த நேரத்தில் சில பயிர்களை மட்டும் மூடிய கூடாரத்தில் வளர்க்கிறார்கள். ஏழு மாதங்கள் திறந்தவெளியில் வேளாண்மை செய்கிறார்கள். வருடம் முழுவதும் அவ்வப்போது மழை பெய்துகொண்டே இருக்கிறது. சராசரி வெப்பநிலை 10 - 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது. பருவத்தைப் பொறுத்து 20 வகையான காய்கள், சில கீரைகள், பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. ஐந்து பேர் தினமும் வேலை செய்கின்றனர்.
அவ்வப்போது என்ன உற்பத்தியாகிறதோ அதை எல்லா உறுப்பினர்களுக்கும் பிரித்து அனுப்புகிறார்கள். அதிக மழை, நத்தை, புழுத் தாக்குதல், களை ஆகியவைதான் இவர்களுக்குப் பெரிய சிக்கல். நாளுக்கு நாள் நிலையற்ற, கடுமையான இயற்கைச் சூழலில், கரிமச்சத்தை இழந்து நிற்கும் மண்ணில் நோய்களும் பூச்சிகளும் பயிர்களை எளிதில் தாக்குகின்றன. இதனால் இயற்கை முறையில் திட்டமிட்ட உற்பத்தியை உருவாக்க முடிவதில்லை. அப்படியான இழப்புகளை உணவைப் பெறும் பண்ணை உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தும்போது, அவர்கள் நிலவரத்தைப் புரிந்துகொள்கிறார்கள்.
தரமான (Quality), நிறைவான (Quantity) உற்பத்தி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் விவசாயியின் உழைப்பு ஒன்றுதான். அதற்கான ஊதியத்தைத் தந்தால் மட்டுமே இயற்கை வேளாண்மையைச் சாத்தியப்படுத்த முடியும். விவசாயி - நுகர்வோர் என இருதரப்பினருக்கும் நன்மை தருகின்ற, நடைமுறைச் சாத்தியமுள்ள எளிய தீர்வை நெதர்லாந்து மாதிரி முன்வைக்கிறது. முன்னரே பணத்தைச் செலுத்தி, வரும் விளைச்சலை ஏற்றுக்கொள்ளும் நுகர்வோரின் ஆதரவு இதில் மிக அவசியமானது.
எதிர்பார்ப்புகள்: தமிழ்நாட்டின் 8 கோடி பேருக்குத் தினமும் சுமார் 1.5 லட்சம் டன் காய்கறி தேவைப்படுகிறது. நெதர்லாந்தைப் போன்று முன்னரே பணம் செலுத்தி இயற்கைக் காய்கறிகள் பெறுபவர்கள் தற்போது இங்கு குறைவு. காரணம், இயற்கையான உற்பத்தி இன்று சாத்தியமில்லை என்கிற எண்ணம் பரவலாக இருக்கிறது.
இயற்கை வேளாண்மையைப் பொறுத்தவரை - கேட்கும் அளவு கிடைக்க வேண்டும், பருவங்களைத் தாண்டி எப்போதும் கிடைக்க வேண்டும், வீட்டுக்கே கொண்டுவந்து தரப்பட வேண்டும், விலை குறைவாக இருக்க வேண்டும், வெளிநாட்டு ரகங்கள் வேண்டும் என்றே பலரும் விரும்புகிறார்கள். இயற்கை வேளாண் விளைபொருள்கள் எங்கு, எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றன, அவை உடலுக்கு உண்மையிலேயே ஆரோக்கியமானவையா என்பன போன்ற தகவல்கள் வெளிப்படையாகத் தெரியாத நிலையில், இயற்கை வேளாண்மை குறித்த சந்தேகங்கள் பலரிடமும் தொடர்கின்றன.
மாற்றத்துக்கு என்ன வழி? - விருப்பம் உள்ளவர்கள் தனியாகவோ கூட்டாகவோ முதலில் மூன்று அல்லது ஐந்து குடும்பங்களின் மாதக் காய்கறி தேவையைக் கணக்கிட்டு, இயற்கை வேளாண்மைக்கான வேலையைத் தொடங்கலாம். நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி, அனுபவம் அதிகரிக்கும்போது உறுப்பினர்களை அதிகரித்துக்கொள்ளலாம்.
நீங்கள் நுகர்வோராக இருந்தால் நஞ்சில்லாத உணவை விரும்பும் 5-10 நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து, அருகில் உள்ள இயற்கை விவசாயியைச் சந்தித்து உற்பத்தி செய்துதருமாறு கேட்கலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிரமான இயற்கை விவசாயிகள் பெரும்பாலும் மற்றவரோடு தொடர்பில் இருப்பார்கள். சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்தலாம்.
உள்ளூரைச் சேர்ந்த வேளாண் விற்பனையாளரும் நுகர்வோரும் தொடர்ந்து சந்தித்துக்கொள்ளும்போது ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ள முடியும். இதில் ஏமாற்று வேலைகள் நடக்காது. நேரடியாக உள்ளூரிலிருந்து வருவதால் போக்குவரத்துக்கான (Food miles) தேவை குறையும், இடைத்தரகர் செலவுகளைக் குறைத்து, அறுவடை செய்த சில மணி நேரத்தில் (Fresh) சத்துகள் குறையாமல் காய்கறிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
அன்றாட உணவில் அரிசி, பருப்பின் அளவைவிடப் பச்சைக் காய்கறிகளின் அளவைக் கூட்டுவது உடலுக்குப் பலவிதங்களில் நன்மை தருகிறது என்பதை அலோபதி மருத்துவர்கள் முதல் சித்த மருத்துவர்கள் வரை பரிந்துரைக்கிறார்கள்.
அப்படிப்பட்ட காய்கறிகள் நஞ்சில்லாத முறையில் விளைவிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். இன்றைய உணவுச் சூழலின் சிக்கல்களில் மலைத்துப்போய் நின்றுவிடாமல், ஆர்வம் உள்ளவர்கள் இயன்றதைச் செய்யத் தொடங்கினாலே நல்லதொரு மாற்றத்தைக் காண முடியும். விவசாய நிலத்தின் பாதுகாப்பு, விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வு, விரைவாக அழிந்துவரும் இயற்கை வளங்கள் பற்றிய சிந்தனை மேலோங்கினால் நிச்சயம் மாற்றம் நிகழும்!
- தொடர்புக்கு: anbufoodgarden@gmail.com