சிறப்புக் கட்டுரைகள்

நினைவில் பறக்கும் பறவை | நாவல் வாசிகள் 2

எஸ்.ராமகிருஷ்ணன்

ஸோனாலி பாலி ஆற்றின் மணலில் வெயில் சாய்ந்து விழுந்து கொண்டிருந்தது என்று துவங்குகிறது நீலகண்ட பறவையைத் தேடி நாவல். வெளிர் நீல ஆகாசம், ஸ்படிகம் போலத் தெளிந்த தண்ணீர். சுற்றிலும் தர்பூசணி விளையும் வயல்கள். பின்பனிக் காலத்தின் மாலைநேரம். கார்த்திகை மாதத்தின் கடைசி நாட்கள். வயதான ஈசம் ஷேக் அறிமுகமாகிறார். டாகுர் வீட்டு தனபாபுவிற்குப் பிள்ளை பிறந்திருப்பதாக மகிழ்ச்சியான செய்தி வருகிறது.

அந்த வீட்டை நோக்கி ஈசம் புறப்​படு​கிறார். அவரோடு நாமும் செல்​லத் துவங்​கு​கிறோம். கால இயந்​திரத்​தில் பயணிப்​பது போல நாவல் நம்மை வேறு காலத்​திற்​குள், வேறு நில​வெளிக்​குள் அழைத்​துச் சென்​று​விடு​கிறது.

அதீன் பந்த்​யோ​பாத்​யாயே 1971ல் வங்க மொழி​யில் எழு​திய ‘நீல​கண்ட பஹீர் கோஜே’ என்ற நாவல் தமிழில் ‘நீல​கண்​டப் பறவையைத் தேடி’ என வெளி​யாகி​யுள்​ளது. இதன் மொழிபெயர்ப்​பாளர் கிருஷ்ண​மூர்த்​தி. சாகித்ய அகாதமி பரிசு பெற்ற இந்​நாவலை நேஷனல் புக் டிரஸ்ட் வெளி​யிட்​டுள்​ளது.

அதீன் பந்த்​யோ​பாத்​யாயே கிழக்கு வங்​காளத்​தின் டாக்கா அரு​கே​யுள்ள ரைனாடி கிராமத்​தில் பிறந்​தவர். இந்த நாவலின் களமும் அந்த ஊர் தான். இந்​தி​யப் பிரி​வினைக்கு முந்​தைய காலத்​தில் கதை நடக்​கிறது. நூற்​றாண்​டிற்கு முந்​தைய இந்​திய கிராம வாழ்க்கை எப்​படி​யிருந்​தது என்​பதை நாவல் மிக​வும் நுணுக்​க​மாகச் சித்​தரிக்​கிறது. அது​வும் கவித்​து​வ​மான காட்​சிப்​படிமங்​களு​டன். நாவலின் மகத்​தான இரண்டு கதா​பாத்​திரங்​கள் பெரிய பாபு எனப்​படும் மணீந்​திர நாத் மற்​றும் ஜோட்​டன். இழந்த காதலின் நினை​வில் சஞ்​சரிக்​கிறார் மணீந்​திர​நாத். ஜோட்​டன் அணையா நெருப்​பான உடலின்​பத்​தில் திளைக்​கிறாள். ஒரே விளக்​கின் இரு சுடர்​கள் தான் இரு​வரும்.

நிறைவேறாத காதலைப் போன்ற துயரம் எது​வுமில்​லை. அது மனதின் மூலை​யில் நிரந்தர இருட்​டாகத் தங்கி விடு​கிறது. உடைந்த கிளை​யொன்று மரத்​திலே காய்ந்து தொங்​கு​வதைப் போலத் தீராத வலி தரு​வ​தாகிறது. காதல் தோல்வி என்று அதனைச் சொல்​லக் கூடாது. தோற்​கடிக்​கப்​பட்ட காதல் என்றே சொல்ல வேண்​டும். நீல​கண்ட பறவையைத் தேடி நாவலில் அப்​படியொரு காதல் இடம்​பெறுகிறது. பெரிய பாபு என்​றும், பைத்​தி​யக்​கார பாபு என்​றும் அழைக்​கபடும் மணீந்​திர நாத், வசதி​யான நிலப்​பிரபு​வின் மகன். அழகன். அவர் கல்​கத்​தாவுக்​குப் படிக்​கச்​சென்ற போது பாலின் என்ற ஆங்​கிலோ இந்​தி​யப் பெண் மீது காதல் கொள்​கிறார். பேரழகி​யான அவளுக்கு நீண்டு உயர்ந்த மூக்​கு, நீலக்​கண்​கள். பாப் கட் செய்த தலை. கீட்​ஸின் கவிதைகளை ஆசை​யாகப் படிப்​பவள்.

பாலின் கிறிஸ்​து​வச் சமயத்​தைச் சேர்ந்​தவள் என்​ப​தால் அந்​தக் காதலை மணீந்​திர நாத்​தின் தந்தை ஏற்க மறுக்​கிறார். தந்​தை​யின் பேச்சை மணீந்​திர நாத்​தால் மீற முடிய​வில்லை தந்​தையே வேறு பெண்​ணைப் பார்த்து அவருக்​குத் திரு​மணம் செய்து வைக்​கிறார். இந்த ஏமாற்​றத்​தில் மணீந்​திர நாத் மனம் உடைந்து பித்​தாகி விடு​கிறார்.

பொம்​மைக் கல்​யாணம் போலவே அந்​தத் திரு​மணம் நடக்​கிறது. மணப்​பெண்​ணிற்​குத் தனது கணவனின் காதலைப் பற்றி எது​வும் தெரி​யாது. ஆனால் அவர் நிகழ்​வுல​கில் வாழ​வில்​லை, எங்கோ கனவில் சஞ்​சரித்​துக் கொண்​டிருக்​கிறார் என்​ப​தைத் திரு​மண​மான முதல்​நாளே அறிந்து கொண்டு விடு​கிறாள். அதன் பிற​கான காலத்​தில் தாயை இழந்த குழந்​தையை அரவணைத்​துக் கொள்​வதைப் போல அவரைத் தேற்​றுகிறாள். அவரது நலம் நாடு​கிறாள்.

நாவல் முழு​வதும் ஸோன​பாலி ஆற்​றின் கரை​யில் மணீந்​திர​நாத் நீல​கண்ட பட்​சி​யைத் தேடிக் கொண்​டிருக்​கிறார். நித்​திய ஏக்​கத்​தின் வடிவம் தான் நீல​கண்​டப் பட்​சி. அவர் தன்னை மறந்த நிலை​யில் கொட்​டும் மழை​யில் நனைகிறார். இடு​காட்​டில் போய் அமர்ந்து கொள்​கிறார். ஏரி​யில் படகோட்டி அலைகிறார். வேதனை மீறும் போது தனது கைகளைக் கடித்​துக் காய​மாக்​கிக் கொள்​கிறார். எந்த மருத்​து​வ​ராலும் அவரைக் குண​மாக்க முடிய​வில்​லை.

மணீந்​திர​நாத்​தின் பித்து நிலையை அவரது கிழத்​தந்​தை​யால் தாங்​கிக் கொள்ள முடிய​வில்​லை. மகனின் நிலைகுத்​திய பார்​வை. தன்னை மறந்த செயல்​கள் அவரைக் குற்​றவுணர்வு கொள்​ளச் செய்​கின்​றன. ‘ ‘நீங்​கள் அவளை விரட்​டி​விட்​டீர்​கள். நான் சமுத்​திரத்​தைப் பார்த்​த​தில்லை. ஆனால் வசந்த காலத்து வானத்​தைப் பார்த்​திருக்​கிறேன்.

அந்த வானத்​திற்​குக் கீழே ஸோனாலி பாலி ஆற்​றின் நீரில் அவளு​டைய முகம் தெரி​கிறது. வானத்​தி​லுள்ள ஏதாவது ஒரு பெரிய நட்​சத்​திரம் நீரில் பிர​திபலித்​தால் என் அன்​புக்குரிய பாலின் தூர தேசத்​திலிருந்து என்​னிடம் சொல்​வது போலிருக்​கிறது. குளிர்​காலத்​தில் புற்​களின் மீதுள்ள பனித்​துளி​களைப்பார்த்​திருக்​கிறேன். அந்​தப் பனித்​துளியைப் போலப் பவித்​ர​மான பெண்​ணின் முகத்தை என்​னிட​மிருந்து பிரித்​து​விட்​டீர்​களே அப்​பா.’’ என மணீந்​திர​நாத்​தின் வெறித்த பார்வை சொல்​வதைப் போல உணரு​கிறார்.

ஸோனாலி பாலி ஆறு எப்​படி​யிருக்​கும் என நாவலை வாசிக்​கும் தமிழ் வாசக​னுக்​குத் தெரி​யாது. ஆனால் தான் அறிந்​துள்ள ஒரு ஆற்​றின் நினை​வோடு ஸோனாலி பாலியை மனதிற்​குள் உரு​வாக்​கிக் கொள்​வான். ஸோனாலி பாலி என்ற சொல்லே அதன் பொன்​னிறத்தை உணர்த்தி விடு​கிறது. எந்​தப் பெயரிட்டு அழைத்​தா​லும் ஆற்​றின் வசீகர​மும், ஆற்​றோடுஇணைந்து வாழும் மனித வாழ்க்​கை​யும் ஒன்று போலத்தானிருக்​கிறது.

சுபசெய்​தியை சொல்​வதற்​காக இருட்​டிற்​குள் ஈசம் நடந்து செல்​லும் போது பாதை தெரிவ​தில்​லை. வழியெங்​கும் கேட்​கும் பூச்​சிகளின் சப்​தத்தை நம்​மாலும் கேட்க முடிகிறது. இருட்​டிற்​குக் கைகள் அதி​கம். அது நம் பின்​னால் இருந்து முதுகைத் தட்​டும். அப்​படி இருட்​டின் அகன்ற கரங்​கள் தன்​னைப் பிடித்து இழுப்​ப​தாக உணரும் ஈசம் மயங்கி விழுகிறார். நாவலாசிரியன் தீட்​டும் இது போன்ற சித்​திரங்​கள் அபூர்​வ​மானவை. பேரழகு மிக்​கவை. நாவலின் முக்​கியக் கதா​பாத்​திர​மான பெரிய பாபு மணீந்​திர​நாத் அறி​முக​மாகும் விதம் அபார​மானது. அவர் இருட்​டில் ஒரு ஆமை​யின் மீது உட்​கார்ந்​திருக்​கிறார். அது தன்​னுடைய கால்​களை நீட்டி முகத்​தைத் தூக்கி அவரைக் கடிக்க முயற்சி செய்​கிறது.

வானெங்​கும் மங்​கிய நில​வொளி. அவர் வளர்த்த ஆயிரக்​கணக்​கான நீல​கண்​டப் பட்​சிகள் ஆகா​யத்​தின் ஏதோவொரு மூலை​யில் காணா​மல் போய்​விட்​டதைத் தேடு​வது போலத் தனது கைகளை அகல விரித்​துத் தேடு​கிறார். கைதட்​டிப் பறவை​களை அழைக்​கிறார். நினை​வில் பறக்​கும் பறவையை நேரில் எப்​படிப் பிடிக்க முடி​யும். அந்​தக் காட்சி அபூர்​வ​மான கவித்​து​வத்​துடன் மனதைக் கவ்​வும் வேதனை​யுடன் எழுதப்​பட்​டிருக்​கிறது. கரு​மேகம் சூழ்​வதைப் போல மதவேற்​றுமை அந்​தக் கிராமத்​தைச் சூழ்​வதை​யும் அதன் விளைவு​கள் திரு​விழா​வில் கலவர​மாக மாறு​வதை​யும் நாவல் உண்​மை​யாகச் சித்​தரிக்​கிறது. நாவலின் ஊடே காந்​தி​யின் சட்​டமறுப்பு இயக்​கம் வரு​கிறது. பிரிட்​டீஷ்​காரர்​கள் ஜனங்​களைத்​ தடியடி செய்​து விரட்​டு​கிறார்​கள்​. உண்​மை​யின்​ பொன்​னிற இழைகளைக்​ கொண்​டு நெய்​யப்​பட்​ட​தாலேயே இந்​த நாவல்​ மகத்​தான இலக்​கியப்​ படைப்​பாக இன்​றும்​ கொண்​டாடப்​படுகிறது.

SCROLL FOR NEXT