மேற்கு ஆசியாவில் அமைதி நிலைநாட்டப்படுமா?

By அ.ப.அருண் கண்ணன்

2023 அக்டோபரில் ஹமாஸ் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடி என்று சொல்லி, காஸாவை நிர்மூல​மாக்​கிவந்த இஸ்ரேல், அதன் பின்னர் ஹிஸ்புல்லா அமைப்​பினரின் தாக்குதலுக்குப் பதிலடி என்ற பெயரில் லெபனான் மீது தாக்குதல் நடத்திவரு​கிறது. ஹிஸ்புல்லா அமைப்​புக்கு ஆதரவளித்து​வரும் ஈரானுடன் மீண்டும் பிரச்சினை எழுந்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த, அதற்குப் பதிலடி என்ற பெயரில் ஈரான் மீதான தாக்குதல்​களைத் தொடங்கவிருக்கிறது.

டெல் அவிவில் உள்ள விமான நிலையத்தின் மீது ஹூதிக்கள் தாக்குதல் நடத்தி​யதைத் தொடர்ந்து, ஏமன் நாட்டின் மீதும் இஸ்ரேலின் கோபக் கணை திரும்​பி​யிருக்​கிறது. இஸ்ரேலின் செயல்​பாடு​களால் மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் அதற்கு வெளியிலும் தாக்கம் செலுத்தும் என்ற நிலை உருவாகி​யிருக்​கிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு வழங்கிவரும் ஆதரவு இந்தப் பதற்றம் தொடர்​வதற்கு வழிவகுக்​கிறது.

ஆரம்பம் முதலே அடக்குமுறை: இஸ்ரேல் உருவான வரலாறு, அதன் பிறகான அதன் செயல்​பாடுகள் போன்ற​வற்றுக்கும் மேற்கத்திய நாடுகளின் பரிபூரண ஆசி இருந்​து​வரு​கிறது. 20ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய, அமெரிக்க நலன்களை மேற்கு ஆசியாவில் பாதுகாக்கும் காலனி​யா​திக்க ஆக்கிரமிப்புத் திட்டத்தில் உதித்த நாடுதான் இஸ்ரேல். 1917இல் பாலஸ்​தீனத்தில் யூதர்களின் தாயகம் உருவாவதை ஆதரிக்கும் ‘பால்ஃபோர் பிரகடன’த்தை வெளியிட்டது பிரிட்டன்.

1948ஆம் ஆண்டு பாலஸ்​தீனத்தை இரண்டாகப் பிரித்து இஸ்ரேலை உருவாக்​கியது அமெரிக்​க-ஐநா அவைக் கூட்டணி. இதனால், 8 லட்சம் பாலஸ்​தீனர்கள் அகதிகளா​யினர். 15,000 பேர் கொல்லப்​பட்​டனர். பாலஸ்​தீனப் பகுதிகள் அண்டை நாடுகளின் கட்டுப்​பாட்டுக்குச் சென்றது. உலக வரைபடத்தில் பாலஸ்​தீனம் காணாமலடிக்​கப்​பட்டது. 1967இல் நடந்த போரில் காஸா, மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது. இதை எதிர்த்து ஹமாஸ் அமைப்​பினர் பதிலடி​யாகத் தாக்குதல் நடத்திவந்​தனர்.

ஹமாஸ் இயக்கத்தின் தொடர் தாக்குதலால் 2006ஆம் ஆண்டு யூதக் குடியேற்​றங்​களையும் ராணுவத்தையும் காஸாவில் இருந்து திரும்​பப்​ பெற்றது இஸ்ரேல். அதன்பிறகு, காஸா எல்லைகளை மூடி மேற்குக் கரையில் வசிக்கும் பாலஸ்தீனர்களுடன்கூடத் தொடர்​பு​கொள்ள முடியாத திறந்​தவெளிச் சிறையாக மாற்றியது. காஸா மக்களின் அடிப்​படைத் தேவைகளான எரிபொருள், உணவுப்​பொருள்கள், மருந்துப் பொருள்கள், மின்சாரம், தண்ணீர் என அனைத்​தையும் கட்டுப்​படுத்​தி​விட்டது.

ஒடுக்​கு​முறை​களுக்கு எதிராக ஹமாஸ் உட்பட காஸாவில் செயல்​படும் இயக்கங்கள் ஆயுதம் ஏந்திய தாக்குதலில் சிறிய அளவில் ஈடுபட்டு வந்தன. அதற்கு எதிர்வினை என்ற பெயரில், காஸா மீது கடந்த 17 ஆண்டு​களில் 5 போர்களை நடத்தி, பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்​திருக்​கிறது இஸ்ரேல்.

போராட்ட வடிவங்கள் எவையா​யினும் இஸ்ரேல் மொழியோ வன்முறை என்பதாகவே இருக்​கிறது. அதுமட்டுமல்ல, தான் தயாரிக்கும் ஆயுதங்​களையும் ராணுவத் தளவாடங்​களையும் பாலஸ்​தீனர்கள் மீது பயன்படுத்திச் சோதித்​தறிந்து, அவற்றைப் பிற நாடுகளுக்கு இஸ்ரேல் ஏற்றுமதி செய்வ​தாகவும் ஒரு தகவல் உண்டு. இஸ்ரேலின் அத்து​மீறல்​களைக் கட்டுப்​படுத்த வேண்டிய ஐநா அவையே கண்காணிப்பு, தற்காப்பு தொடர்பான சாதனங்களை இஸ்ரேலிட​மிருந்​துதான் பெருமளவில் வாங்கு​கிறது என்பதும் கவனிக்​கத்​தக்கது.

அக்டோபர் 7 தாக்குதல்: 2022ல், பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி அரசு மேற்குக் கரையில் தொடர்ந்து அப்பாவி பாலஸ்தீன மக்களைச் சுட்டுக்​கொன்​றதுடன், மேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைக்​கப்​போவ​தாகவும் கூறியது. 2020ஆம் ஆண்டு முதல் அமெரிக்கத் தலையீட்டால் அரபு நாடுகள் ஒவ்வொன்றாக இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்​தத்தில் (ஆபிரகாம் ஒப்பந்தம்) கையெழுத்​திட்டன.

2023 அக்டோபரில் இஸ்ரேல் - செளதி அரேபியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. இஸ்ரேலின் இத்தகைய நடவடிக்கைகளால் தங்கள் பிரச்சினை முழுவது​மாகப் பின்னுக்குத் தள்ளப்​பட்டு​விடுமோ என்ற பாலஸ்தீன மக்களின் அச்சத்தின் வெளிப்பாடே 2023, அக்டோபர் 7இல் ஹமாஸ் நடத்திய தாக்குதலாகும். ஆனால், இதை ஒரு சாக்காக வைத்துக்​கொண்டு பல்வேறு பாதிப்புகளை இஸ்ரேல் ஏற்படுத்​திவரு​கிறது.

இஸ்ரேலின் நீதித் துறை அதிகாரத்தைக் குறைக்கும் முயற்சிகளை மேற்கொண்ட நெதன்யாகு தலைமையிலான அரசுக்கு எதிராக, 2023 ஜனவரியில் தொடங்கிய போராட்டம் அக்டோபர் வரை தொடர்ந்தது. இந்தப் போராட்​டங்கள் நெதன்யாகு அரசுக்கு அரசியல்​ரீ​தியாக நெருக்​கடியை உருவாக்கி​யிருந்த சூழலில்தான் ஹமாஸின் தாக்குதல் நடைபெற்றது. கையறு நிலையில் இருந்த நெதன்​யாகு​வுக்கு இத்தாக்​குதல் பெரும் வாய்ப்பாக அமைந்​து​விட்டது.

சர்வதேசச் சமூகத்தின் எதிர்வினை: இஸ்ரேல் அரசின் மிகக் கொடூரமான இத்தாக்​குதல்​களையும் மனித உரிமை மீறல்​களையும் தடுப்​ப​தற்கு உலக நாடுகள் உறுதியான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்​வதற்கு அமெரிக்கா பெரும் தடையை உருவாக்கி வருகிறது. இத்தாக்​குதல்​களுக்கு எதிராக அமெரிக்​காவில் நடைபெற்ற மாணவர்​களின் போராட்​டங்கள், இளம் யூதர்​களின் ‘எங்களின் பேரால் இதைச் செய்ய வேண்டாம்’ என்கிற முழக்​கங்கள், சர்வதேச நீதிமன்​றத்தில் தென் ஆப்ரிக்​காவின் வழக்கு ஆகியவை உலகின் கவனத்தை ஈர்த்தன.

காஸாவில் ஆறு பிணைக்கை​திகள் கொல்லப்​பட்​ட​வுடன் போரை நிறுத்​துமாறு இஸ்ரேலில் தொழிற்​சங்​கங்கள் போராட்​டங்களை நடத்தி​ய​போதும் மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. ஈரானின் நேச சக்திகளான லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹூதிஸ் போன்ற அமைப்புகள் பாலஸ்​தீனத்​துக்கு ஆதரவாக அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்திவரு​கின்றன.

நெதன்​யாகுவின் அதிகார வெறி: ஊழல் குற்றச்​சாட்டுக்கு ஆளாகி​யுள்ள நெதன்யாகு விரைவில் சிறை செல்லும் சூழல் உள்ளது. எனவே, போரைத் தொடர்வதன் மூலம்தான் தனது அதிகாரத்தைத் தக்கவைக்க முடியும் என அவர் கருதுகிறார். சமீபத்தில் ஹிஸ்புல்​லாவின் பல தலைவர்கள் கொல்லப்பட்ட நிலையில், தற்போது அதன் தலைவரான ஹஸன் நஸ்ரல்​லாவும் கொலைசெய்​யப்​பட்​டுள்​ளார். இத்தாக்​குதலில் பல அப்பாவி மக்களும் கொல்லப்​பட்​டனர். நஸ்ரல்​லாவின் இறுதி அஞ்சலி நிகழ்வு பெரிய அளவில் நிகழ்ந்​தால், அங்கும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்​கூடும் என்பதால், ரகசியமாக அவரது சடலம் அடக்கம் செய்யப்​பட்​டிருக்​கிறது. அந்த அளவுக்கு இஸ்ரேலின் ஆதிக்கம் பரவியிருக்​கிறது.

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி அமெரிக்கா அதன் செயல்​பாடுகளை நியாயப்​படுத்து​கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மேற்கு ஆசியாவில் போர் மூள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று பேசினாலும் அதற்கான காத்திரமான நடவடிக்கைகள் எதையும் முன்னெடுக்க​வில்லை. இஸ்ரேல் மீது ஏவப்படும் ஏவுகணை​களையும் ட்ரோன்​களையும் சுட்டு வீழ்த்து​வதில் அமெரிக்கா பெரிய அளவில் உதவுவது குறிப்​பிடத்​தக்கது.

காஸா போரில் இன்னும் பிணைக் கைதிகளை மீட்க முடிய​வில்லை, ராணுவரீ​தியான வெற்றிகளைப் பெற முடிய​வில்லை. எனவே, காஸாவில் நடப்பவை குறித்து உலகத்தின் கவனத்தைத் திசை திருப்பு​வதற்​காகப் போரை விரிவுபடுத்தி அமெரிக்​காவையும் நேரடிப் போருக்குள் இழுத்து வெற்றியை நிலைநாட்ட விரும்​பு​கிறார் நெதன்​யாகு. ஓராண்டாக காஸா மீது நிகழ்த்திய அட்டூழி​யங்​களுக்கு எதிர்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில், எதையும் செய்யத் துணிகிறது இஸ்ரேல் வலதுசாரி அரசு. மேற்கு ஆசியாவில் இஸ்ரேலால் தொட முடியாத இடங்களே இல்லை என்று நெதன்யாகு இறுமாப்புடன் சொல்கிறார்.

ஏற்கெனவே பல ஆயிரம் பாலஸ்​தீனர்​களைக் கொன்று குவித்​துள்ள நெதன்யாகு அரசு, மேற்கு ஆசியாவில் இன்னும் பல ஆயிரம் உயிர்​களைக் காவு வாங்கத் துடிப்பது கவலை அளிக்​கிறது. ஈரானின் எண்ணெய்க் கிடங்​குகள் மீதும் இஸ்ரேல் குறிவைக்​கிறது. ஈரான் மீது அதிருப்​தியில் இருக்கும் அமெரிக்கா இதற்கும் பச்சைக் கொடி காட்டி​விட்டது. இந்தப் பிரச்சினை பெரிய அளவில் வெடித்​தால், செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற எண்ணெய் உற்பத்தி நாடுகளும் இந்தப் பிரச்​சினைக்குள் இழுக்​கப்படும்.

தாக்குதல்களை இஸ்ரேல் கைவிடு​வ​தாகத் தெரிய​வில்லை. ஈரானும் பின்வாங்​கப்​போவ​தில்லை என ஈரான் முதன்மைத் தலைவர் அயதுல்லா அலி கமெனி உறுதி​யாகத் தெரிவித்து​விட்​டார். இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் அணி திரள வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்​திருக்​கிறார். அமெரிக்க அதிபராக யார் பதவியேற்​றாலும் இஸ்ரேல் தொடர்பான அணுகு​முறையும் பெரிய அளவில் மாறப்​போவ​தில்லை. கடைசி​யில், பாதிக்​கப்​படுவது என்னவோ அப்பாவி மக்கள்​ தான்​!

- தொடர்புக்கு: arunkannandrf@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

17 days ago

கருத்துப் பேழை

17 days ago

கருத்துப் பேழை

17 days ago

கருத்துப் பேழை

20 days ago

கருத்துப் பேழை

24 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்