18-ஆவது மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1-இல் முடிகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாள் (ஜூன் 4) வரைக்கும் கணக்கில் கொண்டால், இந்தத் தேர்தலின் அட்டவணைக் காலம் மொத்தம் 81 நாள்கள். 2019 தேர்தலுக்கான அட்டவணைக் காலம் 75 நாள்களாக இருந்தது.
முதல் மக்களவைத் தேர்தல் (1951-52) ஏறக்குறைய 4 மாதங்கள் நடந்தது. 2019 தேர்தலைப் போலவே இம்முறையும் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா உள்பட 15 மாநிலங்களிலும் புதுச்சேரி, டெல்லி உள்பட 7 யூனியன் பிரதேசங்களிலும் அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
முதல் கட்டத்தில் (ஏப்ரல் 19) தமிழ்நாடு, உத்தராகண்ட், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், மேகாலயம், அருணாசலப் பிரதேசம் ஆகிய 8 மாநிலங்கள்; புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
உத்தரப் பிரதேசம், பிஹார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 7 கட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிரத்தில் 5 கட்டங்களாகத் தேர்தல் நடக்கவுள்ளது (2019இல் இங்கு 4 கட்டத் தேர்தல் நடந்தது). யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் 5 கட்டங்களாகத் தேர்தல் நடக்கும். 2019இல் இது மாநிலமாக இருந்தபோது 4 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது.
» ஃபோர்ப்ஸ் இந்திய கோடீஸ்வரர் பட்டியல்: அம்பானி முதலிடம், அதானி 2-ம் இடம்!
» ‘புற்றுநோயால் அவதியுறுவதால் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை’- சுஷில் மோடி அறிவிப்பு
மணிப்பூரில் உள்புறம், வெளிப்புறம் என 2 தொகுதிகள் மட்டுமே உள்ளன. 2023இல் நடந்த இனக் கலவரம் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக உள்புற மணிப்பூரில் ஒரே கட்டமாகவும் வெளிப்புற மணிப்பூரில் இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.