சவிதா தேவி, பெசாகி தர் தங்களது கணவர்களின் உடல்களை அடையாளம் காணும் துயர் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்... - வற்றிய கண்களுடனும் உணர்வற்ற முகத்துடனும் ஒடிசாவின் புவனேஸ்வர் அரசு மருத்துவமனைகளில் காத்துக் கொண்டிருப்பது இவர்கள் மட்டுமல்ல, ஏராளமான குடும்பங்களும் காத்துக் கொண்டிருக்கின்றன.
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் பெரிய விபத்தை ஒடிசாவின் பஹனகா ரயில் தடம் கடந்த வெள்ளிக்கிழமை 7.30 மணிக்கு சந்தித்தது. சுமார் 288 பேர் உயிரிழந்ததாகவும், 1,000-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தகாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் இந்த விபத்தின் மூலம் 1,200 குடும்பங்களின் நம்பிக்கைகள் சிதறிப் போயுள்ளன.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்கு வங்கம், பிஹாரிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த இளம் புலம்பெயர் தொழிலாளர்கள். குறிப்பாக, இங்குள்ள ஓட்டல்களில் பணி செய்து கொண்டிருந்தவர்கள். இறந்தவர்களின் வருமானத்தையே முழு வாழ்வாதாரமாக நம்பிக் கொண்டிருந்த குடும்பங்கள் இறப்புச் செய்தி கேட்டு அவர்களது உடல்களை மீட்டிட அவசர அவசரமாக சொந்த ஊரிலிருந்து புவனேஸ்வர் வந்தடைந்துள்ளனர்.
”பிஹாரில் வேலை இருந்தால் நாங்கள் ஏன் சென்னைக்கோ பிற மாநிலங்களுக்கோ செல்லப் போகிறோம்... எங்கள் பகுதியில் வேலையிருந்திருந்தால் 19 வயதான என் இளைய தம்பி இன்று உயிருடன் இருந்திருப்பார். அவரது புகைப்படம் மட்டும்தான் உள்ளது. உடலைத் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று கண்ணீருடன் கூறுகிறார் அந்தச் சகோதரர்.
» ‘சந்திரமுகி’ பார்த்துதான் நடிகையாக முடிவெடுத்தேன்: சுனைனா
» Sivakasi | இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
சடலங்களுக்கு உரிமை கோரும் போலிகள்... - அரசு தரும் நிவாரண உதவியை பெறுவதற்காக ஒரே உடலை பலரும் உரிமை கோரும் நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கிறது. உயிரிழந்தவர்களில் 88 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத வகையில் சிதைந்துள்ளதால், அந்த உடல்களை அடையாளம் காணுவதில் சிக்கல் நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து டிஎன்ஏ சோதனை மூலம் உடல்கள் அடையாளம் காணப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி மரியாதை கொடுக்கப்பட்டதா? - ''விபத்துகள் எதிர்பாராதவை. இம்மாதிரியான விபத்தை எந்த தொழில்நுட்பத்தாலும் காப்பாற்ற முடியாது'' என்கிறார் ரயில்வே வாரியத்தின் செயல்பாடு மற்றும் வணிக மேம்பாட்டு உறுப்பினர் ஜெயா வர்மா.
விபத்துகள் எதிர்பாராததுதான். ஆனால் மூன்று மாதங்களுக்கு மாதங்களுக்கு முன்னர் இந்திய ரயில் அமைப்பில் உள்ள சிக்னல் குறைப்பாடுகளை மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் கடிதம் வழியாக குறிப்பிடுகிறார். அதன்பிறகும் இதில் நடவடிக்கை மேற்கொள்ளாமல் கவனக் குறைவாக செயல்பட்ட இந்திய ரயில்வேயின் செயல் நிச்சயம் குற்றமாக கருதபடக் கூடியதே என்கின்றனர்.
விபத்து நடந்த பிறகு தீவிரமாக மீட்புப் பணிகளில் இறங்கிய நவீன் பட்நாயக் அரசின் செயல்பாடுகள் நிச்சயம் பாராட்டப்படக் கூடியது. ஆனால், அதே நேரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அதற்கான கண்ணியமான முறையில் நடந்தப்பட்டதா என்பது அடுத்த கேள்வி. டெம்போக்களில் தூக்கிப் போடப்பட்ட உடல்கள், துணியால் மூடப்படாமல் திடலில் வைக்கப்பட்ட உடல்களைப் பார்க்கும்போது இன்னமும் அடிப்படை மருத்துவ கட்டமைப்புகளில் இந்தியா தன்னளவில் எவ்வளவு பின்தங்கி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது.
ஒரு பெரும் விபத்து ஏற்பட்டால், அதில் இறந்தவர்களின் உடல்களை கண்ணியமான முறையில் பாதுகாக்கும் பாடத்தை நாம் இதுவரை கற்கவில்லை என்பதையே ஆழமாக உணர்த்துகிறது.
புலம்பெயர் தொழிலாளர்களின் பயணம் எப்போது இலகுவாகும்? - மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பிஹார் மாநிலங்களிலிருந்து ரிசர்வ் செய்யப்படாத பெட்டிகளில் பயணித்து தென் மாநிலங்களை நோக்கி வரும் தொழிலாளர்களின் பயணங்கள் நமக்கெல்லாம் அச்சத்தை ஏற்படுத்தக் கூடியது. மிகவும் பாதுகாப்பற்ற முறையில் பல ஆண்டுகளாக பயணித்த இத்தொழிலாளர்களின் ஆபத்தான பயணம் இந்த விபத்தின் மூலம் கூடுதல் கவனம் பெற்றிருக்கிறது.
புலம்பெயர் தொழிலாளர்களின் பயணங்களை வரைமுறைப்படுத்துவதற்கு கடந்த காலங்களில் மத்திய, மாநில அரசு சார்ந்து எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதன் பொருட்டே இந்த விபத்தை வெறும் சிக்னல் குறைப்பாட்டினால் ஏற்பட்ட விபத்தாக மட்டும் குறிப்பிட்டு கடந்துவிட முடியாது. ஏனெனில், பெட்டியில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் பயணிகள் இருந்திருந்தால், இவ்வளவு பெரிய உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது என்ற கருத்தையும் கவனிக்க வேண்டும். பலர் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். அவர்களின் கனவுகளும் கூட.
அதிவேகத்தில் பயணிக்கும் வந்தே பாரத் ரயில்களுக்கு கைதட்டி சிவப்புக் கம்பளம் விரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நிகழ்ந்துள்ள இந்த கோர விபத்து இரு முக்கிய செய்திகளைக் கூறியிருக்கிறது. ஒன்று... உலகின் இரண்டாவது பெரிய ரயில்வே கட்டமைப்பை கொண்ட இந்தியா, ரயில்வே துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய காலத்தில் இருக்கிறது. அடுத்து... புலம்பெயர் தொழிலாளர்களின் பயணங்களில் பாதுகாப்பான வரைமுறையை ஏற்படுத்துவது.
அவ்வாறு செய்யும்பட்சத்தில் உயிரிழந்த அந்த 288 உயிர்களுக்கு அரசு அளிக்கும் உண்மையான இரங்கல் இதுவாகவே இருக்கக் கூடும்!
தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in