ஏ.கே.செட்டியாரின் முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று இந்தப் புத்தகம். பல்வேறு பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் இடம்பெற்ற பயணம் தொடர்பான எழுத்துகளை ஓரிடத்தில் திரட்டித்தந்திருக்கிறார் ஏ.கே.செட்டியார். கட்டுரைகள் மட்டுமல்லாமல் பயணம் தொடர்பான வழிநடைச் சிந்து, லாவணி போன்ற பாடல்களும் இந்தப் புத்தகத்தின் மதிப்பை உயர்த்துகின்றன. ரயில்தான் இந்த நூலின் கதாநாயகன் என்று சொல்ல வேண்டும், ரயிலின் வரவு தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய வியப்பு அளப்பரியது.
அவர்கள் வாழ்க்கையில் ரயில் எப்படி இரண்டறக் கலந்தது என்பதை நமக்குத் தெரிவிக்கும் வரலாற்று ஆவணமாகவும் இந்தப் புத்தகத்தை நாம் சொல்லலாம். 19-ம் நூற்றாண்டின் பிற்பாதியில் தொடங்கி 20-ம் நூற்றாண்டின் முதல் பாதி வரையிலான கட்டுரைகள், பாடல்கள், குறிப்புகள், செய்திகள் என்று ஒரு நூற்றாண்டு பயணத்தைக் கொண்டாடும் தொகுப்பு நூல் இது. நூறு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் தரிசிக்க அற்புதமான காலப்பெட்டகம் இந்தப் புத்தகம்.
நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்
தொகுப்பாசிரியர்: ஏ.கே.செட்டியார்
சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.200