இலக்கியம்

அழுத்தமான வாழ்க்கையைப் பேசும் நாவல்! | நூல் வெளி

செ. ஏக்நாத்ராஜ்

​நாம் நடந்து செல்​கிற தெரு​வோ, ஒரு சாலை​யோ, பாழடைந்து கிடக்​கும் கட்​டிடங்​களோ, காற்​றில் எழுந்து வரு​கிற புழு​தி​களோ, நம் முந்​தைய வரலாற்​றை, வாழ்க்​கை​யை, வென்​ற/வெல்​லாத கனவு​களைப் புதைத்தே வைத்​திருக்​கின்​றன. அதைத் தோண்ட, தோண்ட வரு​கிற சுவாரசி​யங்​கள், ஆச்​சரி​யங்​களாகவோ, அதி​யசங்​களாகவோ இருக்​கலாம். கவிஞர் கலாப்​ரி​யா​வின் நான்​காவது நாவலான ‘மாக்​காளை’ அப்​படி​யான, நினை​வு​களைக் கிளறும் உணர்​வை, தாமிரபரணி​யின் குளிர்ச்​சி​யோடு தரு​கிறது.

திருநெல்​வேலி திரையரங்​கம் ஒன்​றின் பின்​னணி​யைக் கொண்ட இந்த நாவல், 1960களில் நடக்​கிறது. இன்​றைக்​குள்ள தலை​முறை கண்​டி​ராத, வாழ்ந்​தி​டாத வாழ்க்​கையை அங்​கத​மாக​வும் அழுத்​த​மாக​வும் பேசுகிறது. அந்​தக் கால​கட்​டத்து மக்​களின் பழக்க வழக்​கங்​கள், திரையரங்க நடை​முறை​கள், படம் பார்க்க முண்​டும் கூட்​டம், பெண்​கள் டிக்​கெட் கவுன்​டருக்​கான மவுசு, சினிமா விளம்​பரங்​கள், திரையரங்க கேண்​டின் வியா​பாரம், எம்​.ஜி.ஆரின் ‘படகோட்​டி’, ‘எங்க வீட்டு பிள்​ளை’ பட ரிலீஸ்​களின் போது நடந்த கொண்​டாட்​டம் முதல் அப்​போது வெளி​யான படங்​களுக்​கான வரவேற்பு எனச் செல்​லும் தகவல்​களின் வழி, வாழ்ந்து கெட்ட அல்​லது வாழ்​வைத் தொலைத்த விஸ்​வ​நாத அண்​ணாச்​சி​யின் கதையை, எந்​தப் பாசாங்​கின்​றி​யும் விவரிக்​கிறது, நாவல்.

அந்த ஐம்​பது வயது அண்​ணாச்​சி​யின் மனவோட்​டங்​களின் வழியே நகரும் கதை, அவர் மகள் வள்​ளி, உடம்புக்குச் சரி​யில்​லாமல் சிகிச்சை பெறும் அவர் மனைவி வேம்​பு, எல்​லாம் இருந்​தும் எதையோ தொலைத்த மனதுடன் அலை​யும் பேரழகி சுந்​தரம்​மா, சுந்​தரம்​மாளின் மகள் வடிவு, சூழல் அறிந்து உதவு​கிற பணக்​கார நண்​பன் ராம​நாதன், அவர் மனதுக்​குள் உறங்​கும் காதல் ஏக்​கம், சுந்​தரம்​மாவுக்​கும், விஸ்​வ​நாத அண்​ணாச்​சிக்​கு​மான உணர்​வுபூர்வ தருணங்​கள், சுந்​தரம்​மா​வின் பங்​களா போன்ற வீட்டை விலைபேசும் வடநாட்டு சேட்​டு, கிணற்​றில் விழுந்​தவளைத் தூக்​கப்​போய், படக் கூடாத இடத்​தில் காயம்​பட்​டு, காதலைத் தியாகம் செய்​கிற வாசகம் என்​கிற இளைஞன் என இதில் வரும் கீழ் நடுத்​தர​வர்க்க கதா​பாத்​திரங்​கள், நமக்கு நெருங்​கிய​வர்​களாக ஆகி​விடு​வது இந்​நாவல் தரும் மாயம்.

பாதி பக்​கங்​களைத் தாண்​டியதும் நாமும் ஒரு கதா​பாத்​திர​மாக இந்​நாவலுக்​குள் புகுந்து சுந்​தரம்​மா​வின் அரு​கிலோ, சுரண்​டப்​படும் பெண்​களுக்கு ஆதர​வாகவோ, ராம​நாதனுக்கு என்​னாச்​சோ? என்று தவிக்​கிற விஸ்​வ​நாத அண்​ணாச்​சி​க்கு ஆறு​தல் சொல்​ல​வோ, மாக்​காளை முன் நின்​று, அது கேட்​கும் வித​மாக எதை​யும் சொல்​லவோ வைக்​கிறது, நாவல். ஒவ்​வொரு கதா​பாத்​திரத்​துக்​கு​மான மன உணர்​வு​களைப் பேசும் இடங்​களில் வியக்க வைக்​கிறது உரைநடை.

அந்த கால​கட்​டத்​துப் பொருட்​களுக்​கான விலைகள், மாதம் ஐந்து ரூபாய்க்​குத் திரையரங்​கங்​களில் காண்​பிக்​கப்​படும் சிலைடு, அது தொடர்​பான விவரங்​கள், சில்​லரைக் காசுகளில் புழங்​கும் சினிமா டிக்​கெட் விலை, விஸ்​வ​நாதனின் பேச்சையெல்​லாம் ஆடா​மல் அசை​யாமல் கேட்​டுக்​கொண்​டிருக்​கும் நெல்​லை​யப்​பர் கோயி​லின் மாக்​காளை சிலை என கதைக்​குள் விரவிக் கிடக்​கும் விஷ​யங்​கள் நிறைய.

மொரார்ஜி தேசாய் தங்​கக் கட்​டுப்​பாடை கொண்டு வந்​தது, தனுஷ்கோடி அழி​வு, தேவ​தாசி​முறை ஒழிப்பு என அந்​தக் காலக்​கட்​டத்​தில் நடந்த நிகழ்​வு​கள் சில​வும் இதில் பதி​வாகி​யுள்​ளன. எப்​போதோ புழங்கி மறந்​து​விட்ட சொல​வடைகளும் நெல்​லை​யின் பிரத்​யேகப் பேச்சு வழக்​கும் இநநாவலின் சுவாரசி​யத்​தைக் கூட்​டு​கின்​றன. வாசித்து முடித்த பின்​னும் இதன் கதா​பாத்​திரங்​கள் நம் மனதுக்​குள் அங்​குமிங்​கு​மாக அலைந்து கொண்​டிருப்​பதும், ‘அண்​ணாச்​சோ...’ என்​கிற அழைப்​பின் வழி மனதுக்​குள்​ளிருந்​து எட்​டிப்​ பார்க்​கத்​ துடிப்​பதும்​ கலாப்​ரி​யா எழுத்​தின்​ பலம்​.

மாக்காளை (நாவல்)
கலாப்ரியா
சந்தியா பதிப்பகம்
விலை ரூ.300
தொடர்புக்கு: 044-24896979

- தொடர்புக்கு: egnathraj.c@hindutamil.co.in

SCROLL FOR NEXT